ஆ.ராசா |கோப்புப் படம்

 
தமிழகம்

“இனி கூட்டணி இல்லை; தனித்தே போட்டி என ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்” - ஆ.ராசா

எஸ்.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: “தயவு செய்து இனி யாரோடும் கூட்டணி இல்லை, திமுக தனித்தே போட்டியிடும் என திமுக தலைவர் அறிவிக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தனித்து நிற்போம். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமெனில் வேறு வழியில்லை” என திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்தார்.

திருவாரூர் கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் பேசிய ஆ.ராசா, “காமராஜரை தோற்கடித்த விருதுநகர் பெ.சீனிவாசன், அண்ணாவும், ராஜாஜியும் எவ்வளவு பெரிய அறிஞர்கள் என்பதை குறிப்பிடும்போது, “நான் காமராஜரை தோற்கடித்துவிட்டேன், காமராஜரை தோற்கடித்ததற்கு ஒரு பாராட்டு விழா உள்ளது வருகிறீர்களா?” என்று கேட்டாராம்.

அதற்கு அண்ணா, “வின்சென்ட் சர்ச்சிலையும், ரூல்ஸ் வெல்டையும் தெரியுமா என்றார். இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்தை மட்டுமல்ல ஐரோப்பியாவை மட்டுமல்ல, இந்த உலக பந்தை காப்பாற்றியதில் வின்சென்ட் சர்ச்சிலுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு, அந்த வின்சென்ட் சர்ச்சில் போருக்கு பிறகு பொது தேர்தலில் தோற்றுப் போனார்.

வெற்றி பெற்ற இங்கிலாந்து பிரதமரிடம் வின்சென்ட் சர்ச்சிலேயே தோற்கடித்து விட்டீர்களே என்று கேட்டனர் அதற்கு அவர், உலக தலைவராக இருக்கின்ற வின்சென்ட் சர்ச்சிலை ஒரு தோல்வி பாதிக்காது” என்று கூறினாராம்.

ராஜாஜியிடம் கேட்டபோது, மகாத்மாவையே இரண்டு இன்ச் உயரம் உள்ள தோட்டா தான் தொலைத்தது. அதற்காக அந்த தோட்டாவுக்கு பாராட்டு விழா நடத்த முடியுமா?” என்று கூறினாராம்.

அத்தகைய அண்ணாவும், ராஜாஜியும் இருந்த சட்டப்பேரவையில், இன்று யார் யாரோ உள்ளனர். இந்தத் தலைவனை (ஸ்டாலினை) ஒரு தேர்தலை வைத்து எடை போட முடியுமா?

இந்த மேடையில் உள்ள முத்தரசன் மன்னிக்க வேண்டும். இன்னொரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ‘திமுக கூட்டணியே இல்லை’ என்கிறார். அதைச் சொல்ல அவர் யார்?. அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? எங்கள் கட்சி திமுக கூட்டணியில் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். அவருடைய பேச்சு அதிகப்பிரசங்கித்தனம்.

எங்களது கூட்டணியில் 60 இயக்கங்கள் உள்ளன. நேற்று சென்னையில் இருந்து வந்தோம். ‘மீண்டு வருவோம்’ எனத் தொண்டர்களும், ‘தலைவா நாங்கள் இருக்கிறோம்’ என தாய்மார்களும், ‘தலைவரே உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் தமிழ்நாடு உங்களை நம்பித் தான் இருக்கிறது’ என்றெல்லாம் மக்கள் கூறுகிறார்கள்.

இன்னொருவர் பொதுக்குழுவை கூட்டி ஆலோசிக்கிறோம் என்கிறார். அவரது மொத்த கட்சியையே கூட்டினால் கலைஞர் அரங்கத்துக்குள்ளே கூட்டிவிடலாம். அவரெல்லாம் பேசுகிறார். தயவு செய்து இனி கூட்டணி யாரோடும் இல்லை, திமுக தனித்தே போட்டியிடும் என திமுக தலைவர் அறிவிக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தனித்து நிற்போம். தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டுமெனில் வேறு வழியில்லை. பெரியார், அண்ணா, கலைஞரின் மொத்த உருவமாக உங்களைப் பார்க்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT