தமிழகம்

“எப்படியாவது உதயநிதியை முதல்வராக்கவே ஸ்டாலின் பாடுபடுகிறார்” - இபிஎஸ் குற்றச்சாட்டு

வெற்றி மயிலோன்

நாகர்கோவில்: “எப்படியாவது உதயநிதியை முதல்வராக்குவதற்குத் தான் ஸ்டாலின் பாடுபடுகிறார். இம்முறை அப்படியே திமுக வென்றாலும் ஸ்டாலின் முதல்வர் கிடையாது. அரச பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. இனி தமிழகத்தை சாதாரண மக்களில் ஒருவர்தான் ஆள வேண்டும். மக்கள் மனதை புரிந்தவர் தான் வரவேண்டும்” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆரல்வாய்மொழியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “இந்த மாவட்டத்தில் வேளாண்மை, மீன்பிடித்தொழில், ரப்பர் தோட்டம் ஆகியவையே மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுத்தோம். நானும் விவசாயி தான். நாட்டுக்கு உணவு அளிப்பவர் விவசாயி. அடுத்து மீன்பிடித் தொழில். அது சாதாரண தொழில் அல்ல, வீடு திரும்பினால் தான் நிச்சயம். ஆபத்தான தொழில். அவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம், பல திட்டங்கள் சொல்லியிருக்கிறோம்.

          

இங்கு ரப்பர் தொழிலும் சிறக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2017ல் இந்த மாவட்டத்தை ஒக்கி புயல் தாக்கியது. உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு 20 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுத்தோம், கப்பல் ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணிகளில் ஈடுபட்டோம். 31 ஆயிரம் மீனவர்களுக்கு வாழ்வாதார நிதி 2,500 ரூபாய் வழங்கினோம். சேதமடைந்த வீடுகள் விவசாயப் பயிர்களுக்கும் நிவாரணம் அளித்தோம். 16 ஆயிரம் மின் கம்பங்கள் சேதம் அடைந்தது, அவற்றையும் சரிசெய்தோம்.

திமுக ஆட்சியில் மத்தியில் காங்கிரஸ் இருக்கும்போதுதான் கச்சத்தீவை தாரை வார்த்தனர், மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்த, ஓய்வெடுக்க கச்சத்தீவை பயன்படுத்தி வந்தனர், அதனை மீண்டும் மீட்க அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும். அதிமுக சார்பில் கன்னியாகுமரி தொகுதிக்கு தளவாய் சுந்தரம் நிறுத்தப்பட்டுள்ளார் அவருக்கு இரட்டைஇலை சின்னத்தில் வாக்களியுங்கள். கிள்ளியூர் தொகுதியின் தமாகா வேட்பாளர் டாக்டர் நிவின் சைமன், நாகர்கோவில் குளச்சல் பத்மநாபபுரம், விளவங்கோடு ஆகிய தொகுதியில் போட்டியிடும் பாஜகவினருக்கு தாமரை சின்னத்திலும் வாக்களியுங்கள்.

இந்த மாவட்டத்தில் உயர்கல்வி படித்தவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ளது. அதிமுக ஆட்சியில் இங்கு இரண்டு இடங்களில் கல்லூரி கொடுத்தோம், நாகர்கோவில் மற்றும் பால்குளம் இரண்டு இடத்தில் அரசு கல்லூரி கொடுத்தோம். கல்விக்கு முன்னுரிமை கொடுத்தோம். பல துறைகள் இருந்தாலும் நாட்டின் வளர்ச்சி என்பது கல்வியை மையமாக வைத்துத்தான் இருக்கிறது. அதன் அடிப்படையில்தான் முன்னுரிமை கொடுத்து அதிக நிதியுதவி செய்தோம்.

2011-2021 அதிமுக ஆட்சி 10 ஆண்டுகளில் 68 கலை, அறிவியல் கல்லூரிகள் கொடுத்தோம். 21 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 7 அரசு சட்டக்கல்லூரிகள், 4 அரசு வேளாண்மைக் கல்லூரிகள், 5 அரசு கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையங்கள் என பல கல்லூரிகளைத் திறந்தோம். 248 தொடக்கப்பள்ளிகள், 117 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. 1079 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும், 604 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டன. ஒரேயாண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரியை சேர்த்து, அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம்.

ஒரு அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவர கூட திராணியற்றது திமுக அரசு. மிகப்பெரிய கால்நடை பூங்கா, ஆயிரம் கோடியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய பூங்கா தலைவாசலில் உருவாக்கினோம் அதைக்கூட முழுமையாக திறக்கவில்லை. அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்டு கலப்பின பசுக்களை உருவாக்கி பால் வளத்தைப் பெருக்குவோம்.

ஏழை, எளிய, கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விஞ்ஞானக் கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணத்தில் உதித்த அற்புதமான திட்டம் தான் லேப்டாப் வழங்கும் திட்டம். அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் 7300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 52 லட்சத்து 35 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, தலா 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லேப்டாப் கொடுக்கப்பட்டது. திமுக அதை நிறுத்திவிட்டது.

அதிமுக சார்பில் சட்டமன்றத்தில் எடுத்துக் கூறினோம். நான்கரை ஆண்டுகள் கழித்து இளைஞர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு ஆட்சியின் கடைசி நேரத்தில் அவசரமாக கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் கொடுத்துள்ளனர். அது தரமற்ற லேப்டாப்பாக உள்ளதாக கேள்விபட்டேன். அதிமுக அரசு அமைந்தபிறகு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு, இதில் ஊழல் நடந்திருந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள், தாங்கள் இருக்கும் ஊர்களிலும், அருகாமையிலும் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டன. அதையும் நிறுத்திவிட்டனர், மீண்டும் அதிமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்படும். அம்மா மினி கிளினிக்கில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தப்பட்டு, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. அம்மா கிளினிக் மூடிய இடங்களில் மட்டுமல்ல, மக்கள் கோரும் இடங்களில் எல்லாம் திறக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் 254 ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுவந்தோம். மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டன. இந்தியாவிலே அதிகமான தேசிய விருது பெற்ற ஒரே அரசு அதிமுக அரசு. நூற்றுக்கணக்கான தேசிய விருதுகள் பெற்றது. உள்ளாட்சித்துறையில் மட்டும் 140 தேசிய விருதுகளும், போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, சமூகநலத்துறை, உயர்கல்வித்துறை என பல துறைகளிலும் விருதுகளை அள்ளியிருக்கிறது அதிமுக அரசு.

அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே தொடர்ந்து 5 முறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது பெற்றது அதிமுக ஆட்சியின்போதுதான். மேலும், தமிழகத்தில் அதிக உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கி, தேசிய அளவில் ஐந்தாண்டுகள் கிருஷ்கர்மா என்ற உயர்ந்த விருதினைப் பெற்றது அதிமுக அரசு. இதெல்லாம் அதிமுக சிறந்த ஆட்சி என்பதற்கான உதாரணம்.

கொரோனா காலத்தில் ஓராண்டு மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. அப்படிப்பட்ட காலத்தில் கூட ஒரு வருடம் ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம். ஆயிரம் ரூபாய் கொடுத்தோம். தைப்பொங்கல் அன்று 2500 ரூபாய் கொடுத்தோம். அம்மா உணவகம் மூலம் மூன்று வேளை உணவு கொடுத்தோம். உயிர்களைக் காப்பாற்றினோம். ஓராண்டு வரி வருவாய் அரசுக்கு இல்லை. அப்போதும் கூட சிறப்பான ஆட்சி கொடுத்தோம்.

இந்த ஆட்சியில் புயல், வெள்ளம், கொரோனா வந்ததா? ஒன்றுமில்லை. ஆனால், ஊழல் மட்டும் நிறைந்திருக்கிறது. கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் மூன்றும் தான் ஐந்தாண்டு சாதனை. எப்படியாவது உதயநிதியை முதல்வராக்குவதற்குத் தான் ஸ்டாலின் பாடுபடுகிறார். வெற்றி பெறமாட்டார்கள், அப்படியே வென்றாலும் ஸ்டாலின் முதல்வர் கிடையாது. உங்கள் கனவு பலிக்காது. அரச பரம்பரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. இனி தமிழகத்தை சாதாரண மக்களில் ஒருவர்தான் ஆள வேண்டும். மக்கள் மனதை புரிந்தவர் தான் வரவேண்டும். அந்த வகையில் கீழே இருந்து தான் நான் வந்துள்ளேன். ஸ்டாலின் போல வரவில்லை.

எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு சிறப்பான ஆட்சி செய்தேன். வறட்சி, புயலின்போதும் சிறப்பாக செயல்பட்டோம். கொரோனாவிலும் விலைவாசி உயரவில்லை, அப்படியொரு திறமையான ஆட்சி கொடுத்தோம். இந்த ஆட்சியில் சொத்துவரி, வீட்டு வரி, கடை வரி எல்லாம் 100% முதல் 150% உயர்ந்துவிட்டது. குப்பையைக் கூட விட்டுவைக்கவில்லை. மின்கட்டணம் 67% உயர்வு. இந்த அரசு மீண்டும் தொடர வேண்டுமா?.

மேலாக, இந்த ஆட்சியில் வருமானம் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி வருவாய் வருகிறது. ஆனாலும் கடன் வாங்குகிறார்கள். கடன் வாங்கியும் புதிய திட்டம் எதுவும் வரவில்லை. இந்த பணம் எல்லாம் போக வேண்டிய இடத்துக்கு போய்விட்டது. 5 லட்சம் கோடி கடன். 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 4 லட்சத்து 85 ஆயிரம் கோடிதான், ஆனால் அதைவிட திமுகவின் ஐந்தாண்டுகளில் 5 லட்சம் கோடி கடன்.

கடன் வாங்கி என்ன திட்டம் கொண்டு வந்தார்கள்..? ஒருபக்கம் வருவாய் அதிகரிப்பு, ஒரு பக்கம் கடன் வாங்குகிறார்கள். ஆனால், அதிமுக கொரோனாவில் ஒரு வருடம் வருவாய் இல்லாமல் 40 ஆயிரம் கோடி செலவு செய்தோம். ஸ்டாலின் ஆட்சியில் தமிழ்நாடு தலை தொங்கிப் போயிருக்கிறது. இந்த கடன் எல்லாம் மக்கள் தலையில் தான் விழும். நான் பேசுவது சரியா, தவறா என்று சிந்தியுங்கள், சரியாக இருந்தால் ஆதரியுங்கள். எங்கு பார்த்தாலும் கஞ்சா போதை பொருட்கள் பல வடிவத்தில் வந்துவிட்டது, போதை ஆசாமிகளால் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. சிறுமி முதல் பாட்டி வரை பாதுகாப்பில்லை. இப்படிப்பட்ட கேவலமான ஆட்சி தொடரவேண்டுமா?

கன்னியாகுமரியில் அரசு கலைக் கல்லூரி, 110 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம், சுற்றுலாவுக்கு இரண்டு அதிநவீன கப்பல் வாங்கி கொடுத்தோம், மேலமணக்குடி கீழ மணக்குடி மேம்பாலம் கட்டப்பட்டது. மணக்குடி உயர்மட்டப் பாலத்துக்கு லூர்தம்மாள் சைமன் அவர்களுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் அவர் பெயர் சூட்டப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சியாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தோவாளையில் தென்னை மதிப்புக் கூட்டு மையம் அமைக்கப்பட்டது. 250 கோடியில் குடிநீர்ப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது, அதனை திமுக கிடப்பில் போட்டது, இதனை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மலர் உற்பத்தி சாகுபடி விவசாயிகளுக்கு எம்ஜிஆர் மலர் வணிக வளாகம் தோவாளையில் அமைத்துக் கொடுத்தோம். தென்னை மதிப்புக் கூட்டு வாரியத்துக்கு 16 கோடியில் கட்டிடம் அமைக்கப்பட்டது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் மூடிவிட்டனர்.

மீனவர் மக்கள் கோரிக்கையை ஏற்று மீன்பிடித் தடைக்கால நிவாரணத்தை 12 ஆயிரமாக உயர்த்தி கொடுத்திருக்கிறோம். மீனவர் இறந்தால் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் வழங்கப்படும், மீனவர்களுக்கு இன்சூரன்ஸ் செய்துகொடுக்கப்படும். பிரீமியத்தை அரசே செலுத்தும். மீனவர் மீட்புக்குழு, இழுவைப்படகு வசதி செய்துகொடுக்கப்படும்,. கடற்கரை மாவட்டங்களில் தேவைப்படும் இடங்களில் ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்படும். தூண்டில் வளைவு, கடல் அரிப்பை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கப்படும். மீனவர் மானிய டீசல் 500 லிட்டராக உயர்த்தப்படும். மீனவர் பொருளாதாரம் மேம்படுத்த மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும். நவீன படகுகள் வாங்குவதற்கு கடனுதவி வழங்கப்படும். தொலைதொடர்பு மையம் ஏற்படுத்தப்படும்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்ப தலைவிக்கும் மாதம் 2 ஆயிரம் வழங்கப்படும். மக்களின் துன்பத்தை களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆண்களும் நகரப் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். விலையில்லா பருப்பு எண்ணெய் வழங்கப்படும். வீடு இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி வீடு கட்டுக்கொடுக்கும். பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் 5 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். பட்டப்படிப்பு படித்து பதிவுசெய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கிக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். நடைபாதை ஓரமாக புதிய கடை வைப்பவர்களுக்கு 2 லட்ச ரூபாய் கடனுதவி வழங்கப்படும். கட்டிடத் தொழிலாளர்கள் உயிர் இழந்தால் குடும்பத்துக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். அவர்கள் காப்பீட்டில் சேர்க்கப்பட்டு பிரீமியம் தொகையை அரசே செலுத்தும்.

திமுக ஆட்சியில் நீட் ரத்து செய்வேன் என்று சொன்னார்கள். ஆனால், நீட் கொண்டுவந்ததே திமுக தான். 2010 டிசம்பர் 21ம் தேதி திமுகவை சேர்ந்த காந்திசெல்வன் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான் நீட் சட்டம் கொண்டுவரப்பட்டது. கொண்டுவந்ததும் திமுக, காங்கிரஸ். எதிர்ப்பதும் அவர்கள் தான். இரட்டை வேடம் போடுகிறார்கள். நீட் ரகசியம் இருக்கிறது என்றார் உதயநிதி. நீட்டுக்கு விதிவிலக்கு பெற முடியாது என்று சட்டமன்றத்தில் ரகசியத்தை சொல்லிவிட்டார் ஸ்டாலின். மக்களை ஏமாற்றி திமுக அந்தர் பல்டி அடித்துவிட்டது. இதைத்தான் நாங்களும் சொன்னோம்.

வருகின்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம், ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் மாடல் அரசு. பைபை ஸ்டாலின்” என்று முடித்தார்.

SCROLL FOR NEXT