சென்னை: ‘ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு ஸ்டாலின் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல. அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாறக் கூடாது என்பதற்காகத்தான்’ என தவெகவை திமுக விமர்சித்துள்ளது.
மிசா விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் விஜய், அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோர் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இதற்கு விளக்கமளிக்கும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டார். இதனை தவெக விமர்சித்த நிலையில், அதற்கு திமுக பதிலளித்துள்ளது.
இது குறித்து திமுக ஐடி விங்க் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அணில்கள் கண்ணை மூடிக்கொண்டால், உழைப்பாலும் தியாகத்தாலும் கட்டமைக்கப்பட்ட திமுகவின் வரலாறு இருண்டு போய்விடாது. ஊர் முழுவதும் பொய்யைப் பரப்பும் கூட்டத்தை அம்பலப்படுத்த அரசியல் நாகரிகத்தோடு எங்கள் தலைவர் அளித்த விளக்கம், அந்தத் தற்குறிகளுக்கானது அல்ல; அவர்களின் பொய்யை நம்பி அப்பாவி மக்கள் மீண்டும் ஒருமுறை ஏமாந்து விடக் கூடாது என்பதற்காகத்தான்.
வரலாறு, தியாகம் என்றால் என்னவென்றே தெரியாமல், சமூக வலைதளங்களில் பொய்யையும் அவதூறையும் பரப்புபவர்கள் நடத்தும் கட்சிதான் தவெக என்பதை மறுபடியும் நிரூபித்து இருக்கிறார்கள்.
மூளையும் முகமும் இல்லாமல், தந்தையின் தயவால் சினிமாவில் வளர்ந்து, ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசி, 'டூப்' வைத்துச் சண்டை போட்டவருக்கு, சிறைக் கொட்டடியில் மிசா கைதிகள் போலீஸாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டுச் சிந்திய ரத்தத்தின் மதிப்பு எப்படித் தெரியும்?
பத்திரிகையாளர்களை நேருக்கு நேர் சந்திக்கத் துப்பில்லாமல், சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கான பதிலுரைக்கு மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, கேமரா முன்னால் கத்தி, கதறி நடிப்பவருக்கு நிஜ வலிகளின் உணர்வு எப்படிப் புரியும்?
மிசா தியாகம் என்பது, சினிமாவில் நடிப்பது போல அல்ல. அது கொள்கை உறுதி மாறாமல், சிறைச்சாலையின் இரும்புக் கம்பிகளுக்கிடையே ரத்தம் சிந்திய நிஜம்.
கால்ஷீட் காப்பியையும், வருமானத்தை மறைத்து வாங்கிய 'ஐடி ரெய்டு' காப்பியையும், வசனகர்த்தாக்கள் எழுதிக்கொடுக்கும் ஸ்கிரிப்ட பேப்பரையும் மட்டுமே பார்த்துப் பழகிய மூளைக்கு எமர்ஜென்சி காலத்தில் நடந்த மிசா கொடூரங்களை ஆவணப்படுத்திய இஸ்மாயில் கமிஷன் அறிக்கை எனும் வரலாற்று ஆவணத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் வக்கு எங்கே இருக்கப் போகிறது?
கருணாநிதி அணிந்திருந்த 'மஞ்சள் துண்டு', இந்த மாநிலத்தின் சமூக நீதியைக் காத்த சுயமரியாதைக் குறியீடு. ஆனால், இந்த 'டம்மி' முதல்வரின் மேக்கப்பை கலைத்துவிட்டால், உள்ளே மிஞ்சுவது வெற்று அரசியல் சூனியமும், நிர்வாகத் திறமையின்மையும்தான்.
நீங்கள் விமர்சிக்கும் அந்த 'கட்டுமரம்', இந்தியாவின் பல அரசியல் சுனாமிகளையே நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொண்டு தமிழ்நாட்டைக் காத்தது மாபெரும் வரலாறு. அதில் ஒன்றுதான் எங்கள் தலைவரும், திமுக தொண்டர்களும் மிசா சிறைவாசத்தை எதிர்கொண்ட எமர்ஜென்சி எனும் நெருக்கடி நெருப்பாறு.
கொள்கை, சித்தாந்தம் எதுவும் இல்லாமல், தியாகிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் உங்கள் அநாகரிகச் சாக்கடையிலேயே, தவெக எனும் காகிதக் கப்பல் மூழ்கும். இதோ அந்த எமர்ஜென்சி காலத்து மிசா சிறைவாசம் தொடர்பான வராலற்று ஆதாரங்கள். குரைக்கும் விலங்குகளே கவ்விக் கொண்டு ஓடுங்கள்.
வரலாற்றில் நிலைத்து நிற்கும் மாபெரும் தியாகத்தை உருவக் கேலி செய்த உங்களின் கேடுகெட்ட அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் காரித் துப்புகிறார்கள். காரணம், இந்த ஆவணங்களில் உள்ள பதிவுகளை அவர்கள் தங்கள் நெஞ்சில் பதிய வைத்திருக்கிறார்கள்’ என்று திமுக ஐடி விங் தெரிவித்துள்ளது.
முன்னதாக தவெக ஐடி விங்க் வெளியிட்ட பதிவில், ‘பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட ‘சிறை சென்ற தியாகி’ என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் பற்றிக்கொண்டதோ?
எதை உலகறியக் கூடாது என்று கருணாநிதி முதல் உதயநிதி வரை கட்டி அடைகாத்தார்களோ, அது அம்பலமானதில் அச்சம் அதிகமாகியிருக்கிறது. அத்தனை நீளமாகப் பேசியும் தடுப்புக் காவல் நகல் (detention copy) பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.
உண்மைக்கு விளம்பரங்களோ, விளக்கங்களோ தேவையில்லை. ஆனால் இங்கே ஷூட்டிங் வீடியோ வெளியாகிறது என்றால், போலி பிம்பம் உடைந்தது உண்மையாகிறது. பல கட்-கள், உணர்வற்ற பேச்சு, மீண்டும் உண்மைக்கு மாறான ஒன்றை நம்ப வைக்க முயலும் படுதோல்வி முயற்சியாகவே தெரிகின்றன.
கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்ப் பிம்பம், மெய்யைத் தாக்குப் பிடிக்காது என்பதை நிரூபித்திருக்கிறது இன்று வெளியான பொய் போராளியின் வீடியோ’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.