திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை: ‘காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவுடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி நீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நாம் எடுத்த முயற்சிகளின் வரலாறு மிக நீண்டது. 1960-ம் ஆண்டுகளில் தொடங்கி 1990 வரை பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தத் தீர்வும் கிடைக்காததால்தான் அது கைவிடப்பட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கருணாநிதி முதல்வராக இருந்தபோது காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டபோதெல்லாம் திமுக அதை நிராகரித்தது. ஏனெனில் பிரச்சினையை இழுப்பதாகவே அந்த பேச்சுவார்த்தைகள் அமையும். குறிப்பாக, காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவது தமிழகத்தின் உரிமையை முழுவதுமாக நிராகரிப்பதாகும்.
எனவே, இதுதொடர்பாக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் பயனில்லை. மேகேதாட்டு குறித்து பேசுவதற்காக, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்தபோது, அப்போது முதல்வராக இருந்த நான் மறுத்துவிட்டேன்.
இந்நிலையில் கர்நாடகா முதல்வருடன், தமிழக முதல்வர் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார் என வேளாண்துறை அமைச்சரே தெரிவித்தது விவசாயிகளிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேகேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம். அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது என்று கர்நாடகா தொடர்ச்சியாகச் சொல்லும்போது அவர்களிடம் பேசி என்ன ஆகப் போகிறது?
காவிரி நீர் திறக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி ஏற்கெனவே ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு, எந்தெந்த மாதம் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்பதை
தெளிவுபடுத்தியது. அதை செயல் படுத்தக் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டு விட்டன. இந்நிலையில் பேச்சுவார்த்தைக்குச் செல்வது என்பது தமிழக அரசின் 30 ஆண்டுகால சட்டப் போராட்டத்தை சிதைப்பதாக அமைந்துவிடும். ஏற்கெனவே உள்ள சட்டப்பூர்வ உரிமையைச் சிதைக்க ‘பேச்சுவார்த்தை’ என கர்நாடகா தற்போது விரித்துள்ள சதிவலையில் முதல்வர் சிக்குவது ஏன்? தமிழகத்தின் உரிமையைத் தாரைவார்க்கும் விதமாக முதல்வர் செய்யும் இந்தச் செயலைப் பார்த்து டெல்டா விவசாயிகள் கொதித்துப் போயுள்ளனர். கர்நாடகாவை ஆள்வது காங்கிரஸ்.
தமிழக அரசிலும் காங்கிரஸ் பங்கு வகிக்கிறது. எனவே, கண்துடைப்புக்காக இதுபோன்ற பேச்சுவார்த்தை நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. தமிழகத்துக்கு காவிரி நீர் தர கர்நாடகம் மறுத்தால் அது நீதிமன்ற அவமதிப்பு.
மேகேதாட்டு அணை கட்ட முயற்சிப்பது உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பை மீறுவதாகும். காவிரி போன்ற மாநிலத்தின் முக்கிய பிரச்சினைகளில் அனைத்துக் கட்சிகள், விவசாய சங்கங்களின் ஆலோசனைகளைப் பெற்றே செயல்பட வேண்டும். எனவே, காவிரி உரிமைதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு கர்நாடகம் செல்லும் தவறான முயற்சியை முதல்வர் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் சந்திப்பு: இதற்கிடையே, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் காவேரி தனபாலன் தலைமையில் 40-க்கும் மேற்பட்டவிவசாய சங்கங்களின் நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேற்று சந்தித்துப் பேசினர்.
அப்போது, “ஜுன் 12-ம் தேதி திறக்க வேண்டிய மேட்டூர் அணைதிறக்கப்படாததால் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. கர்நாடகாவிடம் இருந்து காவிரி நீரை பெற்றுத்தர திமுக குரல் கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர். முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.