அமைச்சர் நிர்மல் குமார் | கோப்புப் படம்

 
தமிழகம்

“ஸ்டாலினும், பழனிசாமியும் சேர்ந்து ஆட்சி அமைக்க இப்போதும் முயல்கின்றனர்” - நிர்மல் குமார்

என்.சன்னாசி

மதுரை: “ஒவ்வொரு நாளும் மு.க.ஸ்டாலின், பழனிசாமி சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிக்கின்றனர்” என அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டினார்.

மேலூரில் முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை யொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. இப்போட்டியை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு செய்த ஊழல்கள் தொடர்பாக கிடைத்த ஆதாரப்பூர்வ ஆதாரங்கள் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை செய்கிறது. சோதனை நடந்த இடங்களில் பல்லாயிக்கணக் கான கோடி ரூபாய் மக்கள் பணம் ஊழலாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க இன்று காலையில் கூட முயற்சித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் முக.ஸ்டாலினும், உதயநிதியும், பழனிசாமியும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிக்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் விஜய் வரவேண்டும் என, வாக்களித்துள்ளதால் குறுக்கு வழியில் யாரையாவது விலைக்கு வாங்கலாமா என, குதிரை பேரத்தில் ஸ்டாலின் உதயநிதி , அவரது மாப்பிள்ளை, பழனிசாமி, அவரது மகன் சேர்ந்து ஈடுபடுகின்றனர்.

இதன் வெளிப்பாடு தான் கூட்டணியை விட்டு, அவர்களை விட்டு கூட்டணிக் கட்சியினர் வெளியேற முக்கிய காரணம். மதிமுக எம்எல்ஏக்களை அவர்கள் கட்சி கூட்டத்திற்கு போகவிடாமல் செய்தது யார்? அவர்கள் ஆட்சியில் இருந்த போது, என்னவெல்லாம் செய்திருப்பார்கள். கூட்டணியில் இருந்த விசிக உள்ளிட்ட பல பேரை பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்து திமுக மிரட்டியது. இப்போதும் அந்த வேலையை செய்கின்றனர். ஆனால் திமுகவில் பல எம்எல்ஏக்கள் உடன் படவில்லை. அவர்கள் ராஜினாமா செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இரண்டு குடும்பத்தின் சொத்துக்களை பாதுகாக்க,, ஊழலை மறைக்கவே இரண்டு பேரும் சுயநலமாக முடிவெடுக்கின்றனர். அவர்கள் ஜனநாயக படுகொலை செய்யவும் தயாராக இருக்கின்றனர். இதற்கான முயற்சி இந்த நிமிடம் வரை நடக்கிறது.

இயற்கை வளங்களை கொள்ளை அடித்தவர்களை இந்த அரசு மன்னிக்காது. அதிமுக, திமுகவின் பேராசையால் பல இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மதுரையை சுற்றி மலையே இல்லை. பாதியை வெட்டி வெளியே போட்டது போல் உள்ளது. ஊழல், இயற்கை வளங்களை கொள்ளையடித்தவர்களுக்கு எந்த மன்னிப்பு இருக்காது. கிரானைட் வழக்குகளில் அரசு முழு ஒத்துழைப்பு அளித்து விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.

SCROLL FOR NEXT