சிவகாசி: மக்கள் மனதை புண்படுத்தாமல் அரசியல் செய்தால் தவெக அரசு நீடிக்கும் என ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் அறிவுரை வழங்கியுள்ளார்.
திமுக, தவெக இந்து விரோத போக்கை கைவிட வலியுறுத்தி சிவகாசியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் பேசியதாவது: அரசியல் வேறு, மதங்கள் வேறு என்பதை புரிந்து மக்கள் மனது புண்படும்படியாக யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்ற கோரிக்கையை முதல்வர் விஜய்க்கு முன் வைக்கிறோம்.
சனாதன எதிர்ப்பு பேச்சை கண்டித்து இந்தியா முழுவதும் இன்று வெகுண்டு எழுந்துள்ளதற்குக் காரணம் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும்தான். மக்களின் மனது புண்படும்படி பேசிவிட்டு, மக்களிடையே விரோதத்தன்மையை வளர்த்தது தமிழக அரசியல் கட்சிகள்தான்.
தற்போதைய தமிழக அரசு எந்த ஒரு மதத்தையும், எந்தக் கடவுளையும் இழிவாகப் பேச அனுமதிக்கக் கூடாது. மக்களிடையே பிரச்சனை இன்றி, மக்களின் மனதைப் புண்படுத்தாமல் அரசியல் செய்தால் தவெக அரசு நீடிக்கும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டாள் தாயாரிடம் பிரார்த்தனை செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.