சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு, மீண்டும் தேர்தலை நடத்துவதே சரியான தீர்வாக இருக்கும் என்று ஸோஹோ நிறுவனத் தலைவர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளதாவது, “வாக்கு எண்ணிக்கை முடிவுகள் திருப்திகரமாக இல்லை. அமையும் அரசு பல்வேறு அழுத்தங்கள் மற்றும் இழுபறிகளால் நிலையற்றதாகவே இருக்கும். தமிழகத்திற்கு இதைவிடச் சிறந்த மாற்றங்கள் தேவை.
தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திவிட்டு, மீண்டும் தேர்தலை நடத்துவதே சரியான தீர்வாக இருக்கும். அந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை முழுமையாகத் தடுத்து, நேர்மையான முறையில் நடத்தினால் மட்டுமே உண்மையான மக்கள் தீர்ப்பு எது என்பது தெரியவரும்.
மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டால் விஜய் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார். திமுக மற்றும் அதிமுக அதை தடுக்க விரும்பினால், அவர்கள் ஒன்றிணைந்து போராடட்டும். பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும், அது ஒரு புதிய தொடக்கமாக அமையும்" இவ்வாறு ஸ்ரீதன் வேம்பு தெரிவித்துள்ளார்.
கடந்த மே 4-ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளின்படி, தமிழக வெற்றி கழகம் 108 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. திமுக 59 இடங்களையும், அதிமுக 47 இடங்களையும் பிடித்துள்ளன. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இதன் காரணம் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிந்துள்ளது.