ராமேசுவரம்: தமிழக முதல்வராக பதவியேற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய்-க்கு இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள சி.ஜோசப் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாச்சாரம், வணிகம் மற்றும் தலைமுறை தலைமுறையாகத் தொடரும் மக்களுக்கிடையிலான ஆழமான உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் நெருக்கமடைந்து வரும் சூழலில், எமது எதிர்காலம் மிகப்பெரிய பொருளாதார வாய்ப்புகளையும், முன்னேற்றத்தையும் கொண்டுள்ளது. இந்தியா- இலங்கை இடையிலான வலுவான கூட்டாண்மையின்கீழ், தமிழகத்துடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் பிராந்திய செழிப்பையும் முன்னேற்றத்தையும் அடைய நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
முதல்வராக ஜோசப் விஜய் மற்றும் தமிழக மக்கள் அனைவருக்கும் மகத்தான வெற்றிகள் கிடைக்க இலங்கை மக்கள் சார்பாக எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மீன்வளத் துறை அமைச்சர்: இதேபோல் இலங்கை மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் விடுத்த வாழ்த்துச் செய்தி: தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். இந்த உயரிய பொறுப்பு, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என நம்புகிறேன்.
இளைஞர்களின் எதிர்காலம், சமூக நீதி, கல்வி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் மனிதநேய அரசியல் ஆகியவற்றை முன்னிறுத்தும் தங்களின் பயணம் மக்கள் மனங்களில் பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
தமிழக மக்களின் வாழ்வாதார முன்னேற்றம், மீனவர் சமூகங்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி, இளைஞர்களுக்கான புதிய வாய்ப்புகள், தமிழர் பண்பாடு மற்றும் மொழியின் மேம்பாடு ஆகிய துறைகளில் தங்களின் தலைமையால் புதிய மாற்றங்கள் உருவாகட்டும்.
இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, மொழி, பண்பாடு மற்றும் உறவுகள் மூலம் நீண்டகால நெருக்கத்தைப் பகிர்ந்து வருகின்றன. அந்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், தங்களின் தலைமையில் பல நல்ல முன்னேற்றங்களும் ஒத்துழைப்பும் உருவாகும் என எதிர்பார்க்கிறேன்.