இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட 9 தமிழக மீனவர்கள்
ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி தலைமன்னார் அருகே கைது செய்துள்ளனர்.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சுமார் 500 விசைப்படகுகளில் 3,000 மீனவர்கள் நேற்று (புதன்கிழமை) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
நள்ளிரவு தலைமன்னார் கடற்பகுதியில் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த வெலிங்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.
பின்னர் படகிலிருந்த ஆரோக்கிய ஜனதன், அந்தோணி பிச்சை, டான் போஸ்கோ, பிரபு, ஆரோக்கிய டெவின், வேலுச்சாமி, சுப்பையா, ஆரோக்கிய ஜெனிஸ்டன், ஸ்டெவின் ஆகிய 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டு தலைமன்னார்ல கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று மன்னார் மீன்வளத் துறையினரிடம் (வியாழக்கிழமை) இன்று காலை ஒப்படைக்கப்பட்டனர்.
தொடர்ந்து சிறைப்பிடிக்கப்பட்ட 9 மீனவர்கள் மீது, எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த ஒரு வார காலத்தில் அடுத்தடுத்து ராமேசுவரம் மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.