சென்னை: “எங்களுக்கு எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றே கோரினோம். அதிமுகவில் பிளவு இல்லை; கருத்து வேறுபாடுதான் உள்ளது” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தவெக அமைச்சர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். அமைச்சர் பதவிக்காக நாங்கள் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அமைச்சர் பதவி கேட்டதாக எங்கள் தரப்பிலோ, தவெக தரப்பிலோ இதுவரை கூறவில்லை.
மக்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். திமுக எதிர்ப்பை எப்போதும் முன்வைக்கும் கட்சி அதிமுக. தவெகவும் திமுக எதிர்ப்பை தான் முன்வைத்தது. அதோடு, அதிமுக கொண்டுவந்த திட்டங்கள் தொடர வேண்டும்.
மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற விரிவான ஆரோக்கியமான கோரிக்கைகளுடன்தான் தவெக அரசுக்கு ஆதரவளித்தோம். இதை சட்டமன்றத்திலும் தெளிவுபடுத்திவிட்டோம். எங்களுக்கு எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர், கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றே கோரினோம். அதிமுகவில் பிளவு இல்லை; கருத்து வேறுபாடுதான் உள்ளது.
ஆனால் எங்களைப் பற்றி தவறாக எழுதி பெரும் குழப்பத்தை சிலர் விளைவிக்கின்றனர். அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இது தொடர்பாக பொதுக்குழுவை நடத்தி விவாதிப்போம். அதிமுகவை உடைக்கும், பிரிக்கும் எண்ணமோ எங்களுக்கு இல்லை. அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும். கட்சி எங்களின் உயிர் மூச்சு. தவறான செய்திகளை பரப்பாதீர்கள்” என்றார்.