சென்னை: தமிழகத்தில் புதிதாக 7 செவிலியர் கல்லூரிகளை தொடங்குவதற்கான அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படாததால், செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப்படிப்புகளில் ரூ.351 கோடியில் ஆயிரக்கணக்கான கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை உருவாக்கும் அறிவிப்பை முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிட்டார்.
அதை நிறைவேற்றும் வகையில், சுகாதாரத்துறையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளில் கூறியிருப்பதாவது: நாமக்கல், திருச்சி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில், தலா 100 பிஎஸ்சி செவிலியர் மாணவர் சேர்க்கை இடங்களுடன் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் உருவாக்கப்படுகின்றன.
இதற்கான ரூ.270.26 கோடி செலவினம் முழுவதும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக நிதியிலிருந்தே ஏற்கப்படுகிறது. கல்லூரிகளுக்கான கட்டிடங்களும், விடுதிகளும் கட்டப்பட்டு வருகின்றன.
அந்தந்த மருத்துவக் கல்லூரிகளில் தற்போதுள்ள இடவசதியில் 600 இடங்களுக்கும் நடப்பு கல்வியாண்டிலேயே மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் 60 பிஎஸ்சி செவிலியர் இடங்களுடன், 7-வது புதிய அரசு செவிலியர் கல்லூரியும் தொடங்கப்படுகிறது.
ஏற்கெனவே உள்ள அரசு செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர் பள்ளிகளில் 1,925 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படுகின்றன.
அதாவது டிஜிஎன்எம் படிப்பில் 1,290 இடங்கள், பிஎஸ்சி செவிலியர் படிப்பில் 440 இடங்கள், எம்எஸ்சி செவிலியர் படிப்பில் 75 இடங்கள் மற்றும் பட்டப்படிப்புக்கு பிந்தைய பிஎஸ்சி செவிலியர்படிப்பில் 120 இடங்கள் என மொத்தம் 2,585 கூடுதல் செவிலியர் மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படுகின்றன.
அதேபோல், 12 துணை மருத்துவப் படிப்புகளில் 2,788 கூடுதல் இடங்கள், மருந்தியல் படிப்புகளில் 735 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.