செந்தில் பாலாஜி | கோப்புப் படம்.

 
தமிழகம்

ரூ.35 கோடி குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேரம் பேசியதாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க, 35 கோடி ரூபாய் சன்மானம் தருவதாக, சிலர் தன்னிடம் பேரம் பேசியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ என்.இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸார், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த யூ-டியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அசோக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில், காவல்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

அந்த மனுவில், அரசியல் உள்நோக்கத்துடன் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது; குதிரை பேரத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை; வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை; இந்நிலையில், போலீஸார் தன்னை கைது செய்யக் கூடும் என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT