சென்னை: “கிறிஸ்டோபர் திலக்குக்கு சொத்துகள் கிடையாது. எதுவுமே இல்லாத ஓர் அடிமட்ட தொண்டனை எம்.பி.யாக காங்கிரஸ் கட்சி தேர்வு செய்திருக்கிறது” என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, “தமிழக காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் கார்கே, ராகுல் ,சோனியா ஆகியோர் ஒரு சாதாரண எளிய தொண்டரை மாநிலங்களவைக்கு தேர்வு செய்திருக்கிறார்கள்.
அவரின் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளபடி, ஒரு சவரன் நகை, 13,000 ரூபாய் பணம் மட்டும் தான் வைத்துள்ளார். அவருக்கு சொத்துகள் கிடையாது. எதுவுமே இல்லாத ஒரு அடிமட்ட தொண்டனை எம்.பி.யாக காங்கிரஸ் கட்சி தேர்வு செய்திருக்கிறது. அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
காங்கிரஸ் இயக்கத்துக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி.யை கொடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
கிறிஸ்டோபர் திலக் ஏற்கெனவே கட்சிக்கும், மக்களுக்கும் அறிமுகமானவர். ஊடகங்களுக்கும் இனி அறிமுகமாவார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைத் தேர்தலில் தமிழகத்தில் இருந்து கிறிஸ்டோபர் திலக் என்ற புதுமுகத்துக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பளித்துள்ளது பரவலாக கவனம் ஈர்த்துள்ளது.