செல்வப்பெருந்தகை |கோப்புப் படம் 

 
தமிழகம்

கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸை சிறுமைப்படுத்த வேண்டாம்: செல்வப்பெருந்தகை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

"கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குக் கூடுதல் இடங்களைக் கோருவதற்கு உரிமை உண்டு, ஆனால் ஒவ்வொரு முறையும் காங்கிரஸுடன் ஒப்பிட்டுப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும், எங்களை சிறுமைப்படுத்த வேண்டாம்" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் 94-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின், செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறியதாவது: கூட்டணிக் கட்சிகள் கூடுதல் இடங்களைக் கேட்பதில் தவறில்லை.

அதைக் கொடுப்பதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கும் தாராள மனம் இருக்கிறது. ஆனால், 'காங்கிரஸுக்கு இத்தனை இடங்கள் கொடுத்திருக்கிறார்களே' என எங்களை முன்னுதாரணமாகக் காட்டிப் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

          

ஒருகாலத்தில் தமிழகத்தில் 110 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், இன்று வெறும் 28 தொகுதிகளில் மட்டுமே நிற்கிறது. இதில் எங்களுக்குஎவ்வளவு வேதனை இருக்கும் என்பதை மற்றக் கட்சியினர் உணர வேண்டும். நாங்கள் யாரிடமும் எங்களை ஒப்பிட்டுப் பேசுவதில்லை. தோழமையுடன் மக்களைச் சந்திக்கவே விரும்புகிறோம்.

நாடாளுமன்றத்தில் 100 உறுப்பினர்களுடன் காங்கிரஸ் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டும் எங்களுக்கு 10 எம்.பி.க்கள் உள்ளனர். இவ்வளவு பலம் இருந்தும் நாங்கள் அடக்கி வாசிக்கிறோம். எனவே, இடப் பங்கீட்டின் போது 'காங்கிரஸுக்குக் கொடுத்திருக்கிறார்கள்' எனத் திரும்பத் திரும்பக் கூறி எங்களைச் சிறுமைப்படுத்த வேண்டாம் எனப் பலமுறை சொல்லிவிட்டோம்," இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT