சென்னை: முருகப்பெருமானின் வரலாற்றை திரித்தால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஜூனியர் என்டிஆர் படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் உட்பட தமிழகத்தின் குன்றுகள் தோறும் குமரனின் கோட்டங்கள் நிறைந்துள்ளன.
முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தொடங்கி திருமுருகாற்றுப்படை வரை சங்கத்தமிழ் இலக்கியங்கள் பலவும், சேயோன், நெடுவேள் என்று பற்பல பெயர்களால் முருகனை போற்றி புகழ்கின்றன. தமிழ்தான் முருகன். முருகன்தான் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாது.
இந்நிலையில் தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை மையப்படுத்தி ஆந்திராவில், இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில், நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தில், முருகனைவடபுலத்தில் பிறந்தவர் என்ற கருத்துருவாக்கத்துடன் உருவாக்குவதை உறுதிப்படுத்தும் விதமாக படக்குழு பதிவிட்டிருப்பது அதிர்ச்சிஅளிக்கிறது.
தமிழர் போற்றும் தெய்வங்களை வணங்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் வரலாற்றை தவறாக திரித்து இழிவு படுத்த உரிமை இல்லை. முருகப்பெருமான் வடபுலத்தில் பிறந்தார் என்பது போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கி அவற்றை கலை என்ற பெயரில் திரித்து திணிக்க முயல்வதை படக்குழு கைவிட வேண்டும்.
இல்லையென்றால் படக்குழு மிகக் கடுமையான எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். எதிர்ப்பை மீறி படம் உருப்பெற்று வெளிவந்தால் தமிழகத்தில் எந்தவொரு திரையரங்கிலும் இத்திரைப்படத்தை திரையிடவிடாமல் நாம் தமிழர் கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.