சென்னை: நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்புதலை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று தவெக கடந்த மே 10-ம் தேதி ஆட்சியமைத்தது. அதன்பின்னர் அலுவல் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தற்போது தலைமைச் செயலகத்தில் உள்ள பிரதான புனித ஜார்ஜ் கோட்டையில் 3-வது தளத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் அலுவலகம், நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட உள்ளது.
இதற்கிடையில், தற்போதைய தலைமைச் செயலகத்தில் இடப் பற்றாக்குறை, வாகன நிறுத்தும் இடவசதி குறைபாடு மற்றும் புதிய கட்டிடங்களை அமைப்பதற்கான கட்டுப்பாடுகள் போன்ற குறைபாடுகள் உள்ளன. இதனால் தலைமைச் செயலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற தவெக அரசு முடிவு செய்தது.
இதையடுத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் சென்னையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,200 கோடியில் உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகத்துக்காகக் கோயம்பேடு, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலைய வளாகம், பட்டினப்பாக்கம் மற்றும் நந்தம்பாக்கம் பகுதிகளில் உள்ள இடங்கள் பரிசீலிக்கப்பட்டன. அதில் முதல்வர் விஜய் பரிந்துரையின்படி பட்டினப்பாக்கம் இறுதி செய்யப்பட்டது.
இதற்காக பட்டினப்பாக்கத்தில் 25.55 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. அரசு துறைகளுக்குச் சொந்தமான அந்த நிலங்களை எடுத்து பணிகளைத் தொடங்க முதல்கட்ட ஒப்புதல் வழங்கி பொதுத் துறை செயலர் சுந்தரவல்லி நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (21.76 ஏக்கர்), சென்னை மாநகராட்சி (0.93 ஏக்கர்) மற்றும் வருவாய்த் துறைக்குச் சொந்தமான (1.73 ஏக்கர்) இடங்களை ஒருங்கிணைத்து 25.55 ஏக்கர் பரப்பில் இந்த புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படுகிறது. அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டப்பேரவை வளாகம், தலைமைச் செயலக கட்டிடம் தோராயமாக 20 லட்சம் சதுர அடி பரப்பில் அமையவுள்ளது. இந்தத் திட்டத்துக்கான விரிவான அறிக்கையை 3 மாதங்களுக்குள் பொதுப்பணித் துறை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இத்திட்ட பணிகளைத் துரிதப்படுத்த, கட்டிட வடிவமைப்பு நிறுவனத்தை முடிவு செய்ய, திட்ட வரைபடம், வடிவமைப்பு ஆகியவற்றை இறுதி செய்ய, கட்டிடத்துக்கான வரைபடம், இறுதி வடிவமைப்பை முடிவு செய்து அளிக்க என 3 சிறப்பு குழுக்களை அமைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இடநெருக்கடி காரணமாக தலைமைச் செயலகத்தை மாற்றுவது தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2003-ல் தலைமைச் செயலகத்துக்கான புதிய வளாகம் அமைக்க திட்டமிட்டார். அந்த திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. அதன்பின் 2010-ல் திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலக கட்டிடம் கட்டி திறக்கப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில், புதிய தலைமைச் செயலகத்துக்காகக் கட்டப்பட்ட கட்டிடம், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.