கோப்புப் படம்| எஸ். சத்தியசீலன்
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் கடந்த டிச.26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து போராட்டத்தின் தீவிரத்தை கட்டுப்படுத்த எஸ்எஸ்டிஏ பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் உள்ளிட்ட தலைமை நிர்வாகிகளை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களையும் உடனுக்குடன் தேடி, தேடி கைது செய்தனர். எனினும் ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்தது.
இந்நிலையில் எஸ்எஸ்டிஏ சங்க நிர்வாகிகளுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து கல்வித் துறை அலுவலர்களும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இவ்விரு பேச்சுவார்த்தைகளும் சுமார் 7 மணி நேரம் நடைபெற்றது. இதையடுத்து கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க போராட்டக் குழுவிடம் அதிகாரிகள் சிறிது அவகாசம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இடைநிலை ஆசிரியர்கள் பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மட்டும் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இந்நிலையில் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து எந்த பதிலும் வரவில்லை எனக்கூறி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். அப்போது ஆசிரியர்கள் காவல் துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் அருகில் இருந்த சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.