பாஜகவில் தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நயினார் நாகேந்திரனை சந்தித்துப் பேசிய சரத்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்த சரத்குமார், தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் பாஜகவில் முக்கிய பொறுப்புவழங்கப்படவில்லை என்று ஆதங்கத்தில் உள்ளார். இதனால் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகளும், ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இது தொடர்பாக நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், “பாஜகவில் எனக்கு முக்கியப் பொறுப்புகள் அளிக்கப்படாதது என்னுடன் பயணிப்பவர்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது. இது குறித்துத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனைச் சந்தித்துப் பேசவுள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, நேற்று நயினார் நாகேந்திரனைச் சந்தித்த சரத்குமார், தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது:
தற்போது நயினாரைச் சந்தித்ததில் திருப்தி நிலவுகிறது. ‘உங்கள் கோரிக்கைகள் நியாயமானவை, அவற்றை நிச்சயம் பரிசீலிக்கிறேன்’ என அவர் கூறியுள்ளார். எனவே, எனது கோரிக்கைகளுக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.