பெ.சண்முகம் | கோப்புப்படம் 
தமிழகம்

“தூய்மைப் பணிகளை வரும் காலங்களிலும் தனியாருக்கு விடக் கூடாது” - பெ.சண்முகம்

வெற்றி மயிலோன்

சென்னை: 12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை முழுமையாக தனியாருக்கு விடுவதற்கு ஆய்வு செய்வதற்காக தவெக அரசு வெளியிட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வரவேற்றுள்ளார். மேலும், வரும் காலங்களிலும் எந்தப் பகுதியிலும் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘12 மாநகராட்சிகளில் தூய்மைப் பணியை முழுமையாக தனியாருக்கு விடுவதற்கு ஆய்வு செய்வதற்காக தவெக அரசு டெண்டர் அறிவிப்பை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெளியிட்டிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட சில கட்சிகளும், தொழிற்சங்கங்களும் இது தவறான நடவடிக்கை, இதனை முழுமையாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தன.

தற்போது அரசாங்கம் அந்த டெண்டரை ரத்து செய்ததாக அறிவித்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசாங்கத்தின் இந்த முடிவை வரவேற்கிறது.

தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக தூய்மைப் பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்துவது தான் வழக்கமாக இருந்து வந்தது. இடையில் தான் தற்காலிகம், ஒப்பந்தம் என பணி பாதுகாப்பற்ற நிலையில் தொழிலாளர்கள் வைக்கப்பட்டு கடும் சுரண்டலுக்கும், பழிவாங்கலுக்கும் ஆளாகினர்.

எனவே, இந்த நிலைமைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரும் காலங்களிலும் எந்த பகுதியிலும் தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடக் கூடாது எனவும், தற்போது ஒப்பந்த பணிகளில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்திட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT