தமிழகம்

“மதுவை கொடுத்து ஏழைக் குடும்பங்களை சீரழிப்பதில் மட்டுமே திமுக சாதனை” - அன்புமணி

மு.சக்தி

சென்னை: மதுவைக் கொடுத்து ஏழைக் குடும்பங்களைச் சீரழிப்பதில் மட்டும் தான் திமுக அரசு சாதனை மேல் சாதனை செய்து வருகிறது என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில்: ”தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளையொட்டி, கடந்த 14, 15, 17, 18 ஆகிய நாள்களில் மொத்தம் ரூ.850 கோடிக்கு டாஸ்மாக் மூலம் மது விற்பனை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்துதில் தோல்வியடைந்து விட்ட திமுக அரசு, மதுவைக் கொடுத்து ஏழைக் குடும்பங்களைச் சீரழிப்பதில் மட்டும் தான் அருவருக்கத்தக்க சாதனை மேல் சாதனை செய்து வருகிறது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் திருநாளின் போது, ரூ.710 கோடிக்கு மது வணிகம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், இப்போது ரூ.140 கோடிக்கு அதிக மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட 20% அதிகம் ஆகும். மது விற்பனை ஓராண்டில் 20% அதிகரிப்பு என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயமல்ல. சமூக சீரழிவின் அடையாளமாகவே இதை பார்க்க முடியும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப் படுத்துவது தான். அதை பாமக விரைவில் சாத்தியமாக்கும்” என்று அன்புமணி கூறியுள்ளார்.

          
SCROLL FOR NEXT