இஸ்ரோ தலைவர் நாராயணன் | கோப்புப் படம்
திருநெல்வேலி: 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படும். ககன்யான் விண்கலத்தை 2027-ல் விண்ணுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இஸ்ரோ தலைவர் நாரயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ககன்யான் திட்டம் என்பது நாம் தயாரிக்கும் ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி வீரர்களை விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பி, அவர்களைப் பத்திரமாகத் திரும்பக் கொண்டு வருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ககன்யான் திட்டத்துக்கான ராக்கெட் தயாரிப்புப் பணிகள் முழு அளவில் நடந்து வருகிறது. விண்வெளியில் விண்வெளி வீரர்களுக்குத் தேவையான வெப்பநிலை, அழுத்தம், கார்பன் டை ஆக்சைடு, ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அமைப்பின் மேம்பாட்டுப் பணிகளும் சிறப்பாக நடைபெறுகின்றன.
ராக்கெட் ஏவுதலின்போது ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், விண்வெளி வீரர்களின் உயிரைப் பாதுகாக்க, அவர்களைப் பத்திரமாக வெளியேற்றும் அமைப்பின் பணியும் மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இத்திட்டத்துக்காகக் கிட்டத்தட்ட 8,000 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
மனிதர்களை ஏற்றிய ககன்யான் விண்கலத்தை 2027-ல் விண்ணுக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக ஆட்கள் இல்லாத மூன்று பரிசோதனை ராக்கெட்டுகள் அனுப்பப்பட உள்ளன.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு இணங்க, 2035-க்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும். இந்த விண்வெளி நிலையம் மொத்தம் ஐந்து தொகுதிகளாக உருவாக்கப்படும். முதல் தொகுதி 2028-ல் விண்ணுக்கு அனுப்பப்படும். இதற்கான ஒப்புதல் கிடைத்து, பணிகள் நடைபெற்று வருகின்றன.
2023-ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தின் அனைத்துப் பணிகளும் நன்றாக நடைபெற்று வருகின்றன. இது ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளமாக அமையும். இந்தத் திட்டம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா என்று பேசுவதற்குப் பதிலாக, இந்திய நாட்டுக்கான ஒரு முக்கியமான மையமாக பார்க்கப்பட வேண்டும்.
2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டுகள் ஏவப்படும். சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது போல, சந்திரயான்-4 திட்டமானது நிலவில் தரையிறங்கி, அங்கிருந்து நிலவின் மாதிரிகளை சேகரித்துத் திரும்ப பூமிக்குக் கொண்டு வரும் இலக்குடன் செயல்படும். இதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.