சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சேதமடைந்த பேருந்துகள்.

 
தமிழகம்

திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்: 9 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு

இ.ஜெகநாதன்

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அருகே 2 அரசுப் பேருந்​துகள் நேருக்கு நேர் மோதி​ய​தில் 9 பெண்​கள் உட்பட 11 பேர் உயி​ரிழந்​தனர்.

புதுக்​கோட்டை மாவட்​டம் அறந்​தாங்​கியி​லிருந்து திண்​டுக்​கல்​லுக்கு நேற்று அரசுப் பேருந்து சென்று கொண்​டிருந்​தது. ஓட்​டுநர் சுதாகர் பேருந்தை ஓட்​டி​னார். இதில் 60 பேர் பயணித்​தனர்.

அதே​போல, கோவை மாவட்​டம் மேட்​டுப்​பாளை​யத்​திலிருந்து காரைக்​குடிக்கு மற்​றொரு அரசுப் பேருந்து சென்று கொண்​டிருந்​தது. ஓட்​டுநர் சென்​றாயன் பேருந்தை ஓட்​டி​னார். இதில் 57 பேர் பயணித்​தனர்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​பத்​தூர் அருகே வைர​வன்​பட்டி சமத்​து​வபுரம் பகு​தி​யில் நேற்று மாலை இரு பேருந்​துகளும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் மேட்டுப்பாளையம் பேருந்து ஓட்டுநர் பழைய வத்தலக்குண்டு சென்றாயன் (36), சிங்கம்புணரி முத்துமாரி (60), காரைக்குடி மல்லிகா (61), கல்பனா (36), தேவகோட்டை குணலட்சுமி (55), மேலூர் சொக்கலிங்கபுரம் செல்லம் (55), பொன்னமராவதி அம்மன்குறிச்சி தெய்வானை (55) உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 9 பேர் பெண்கள். மேலும், இடி​பாடு​களில் ஏராள​மானோர் சிக்​கிக் கொண்​டனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்​புத் துறை​யினர் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். காயமடைந்த 50-க்​கும் மேற்​பட்​டோர் திருப்​பத்​தூர், காரைக்​குடி அரசு மருத்​து​வ​மனை​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர். பின்​னர், 10 பேர் மேல் சிகிச்​சைக்​காக மதுரைக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

விபத்து நேரிட்ட இடத்​தில் சிவகங்கை ஆட்​சி​யர் கா.பொற்​கொடி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிர​சாத் ஆகியோர் பார்​வை​யிட்​டனர். மேலும், திருப்​பத்​தூர் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​வோரை ஆட்​சி​யர் பொற்​கொடி சந்​தித்து ஆறு​தல் கூறி​னார். விபத்து தொடர்​பாக நாச்​சி​யாபுரம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்​கின்​றனர்.

திண்​டுக்​கல் நோக்​கிச் சென்ற அரசுப் பேருந்து அதிவேக​மாக சென்​ற​தாக​வும், மேட்​டுப்​பாளை​யத்​திலிருந்து வந்த பேருந்​தின் ஓட்​டுநர் தூக்க கலக்​கத்​தில் இருந்​த​தாக​வும், அதனால்​தான் விபத்து ஏற்​பட்​ட​தாக​வும் பயணி​கள் தெரி​வித்​தனர்.

தலைவர்கள் இரங்கல்: தமிழக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், “சிவகங்கை விபத்​தில் 11 பேர் உயி​ரிழந்த தகவலறிந்து அதிர்ச்​சி​யடைந்​தேன். உயி​ரிழந்​தோர் குடும்​பத்​தினருக்கு ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். காயமடைந்​தவர்​களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அறி​வுறுத்​தி​யுள்​ளேன். விபத்​தில் உயி​ரிழந்​தோர் குடும்​பங்​களுக்கு தலா ரூ.3 லட்​சம், பலத்த காயமடைந்​தவர்​களுக்கு ரூ.1 லட்​சம், லேசான காயமடைந்​தவர்​களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்​தர​விட்​டுள்​ளேன்” என்று தெரி​வித்​துள்​ளார்.

இதே​போல, பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன், தேமு​திக பொதுச் செய​லா​ளர் பிரேமல​தா, ஐஜேகே தலை​வர் ரவி பச்​ச​முத்​து உள்​ளிட்​டோர்​ இரங்​கல்​ தெரி​வித்​துள்​ளனர்​.

SCROLL FOR NEXT