சென்னை: “பிரம்மபுத்திரா முதல் காவிரி மற்றும் கோதாவரி வரை முக்கிய நதிகளை இணைப்பதன் மூலம், அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க முடியும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 31-வது தென்மாநில முதல்வர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: தென்மாநிலங்களின் வளர்ச்சி நாட்டின் முன்னேற்றத்துக்கு மிக முக்கியமானது. தகவல் தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, மருந்து உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் தென்மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கண்டுபிடிப்பு மற்றும் வருவாய் ஈட்டும் துறைகளில் தென்மாநிலங்கள் பல சிறந்த மரபுகளை உருவாக்கியுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி 80-வது சுதந்திர தின விழாவின் போது, கடந்த 70 ஆண்டுகளில் அடைய முடியாத இலக்குகளை அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் நாம் அடைய வேண்டும் என்றும், அப்போதுதான் உலகளாவிய போட்டியில் நாம் நமது இடத்தை உறுதிப்படுத்த முடியும் என்றும் கூறி உள்ளார். தென் மாநிலங்களின் முன்னேற்றம் தண்ணீரைச் சார்ந்துள்ளது. விவசாயம், தொழில், ஆரோக்கியமான குடிமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் என அனைத்து துறைகளிலும் தண்ணீர் தென்மாநிலங்களின் ஆன்மாவாக உள்ளது.
ஒரு மாநிலத்தின் நலன்களை பாதுகாப்பது தவறல்ல. இந்த செயல்முறையினால் பல ஆண்டுகளாக தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் நிலை ஏற்பட்டால், அது எந்த நலனையும் தராது. பிரம்மபுத்திரா முதல் காவிரி மற்றும் கோதாவரி வரை முக்கிய நதிகளை இணைப்பதன் மூலம், அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க முடியும். இந்த முயற்சி எரிபொருளைச் சேமிக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், செலவு குறைந்த போக்குவரத்து முறையை உருவாக்கவும் உதவும்.
தென்மாநிலங்களில் நிலுவையில் உள்ள நதிநீர் பிரச்சினைகளை ஜல் சக்தி அமைச்சகம், உள்துறை அமைச்சகம், மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஆகியவை சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் இணைந்து விரைவாக தீர்க்க வேண்டும். தென்மாநிலங்கள் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, பரஸ்பர பேச்சுவார்த்தை மற்றும் ஆக்கப்பூர்வமான தீர்வுகள் மூலம் நிலுவையில் உள்ள நதிநீர் தகராறுகளை விரைவாக தீர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.