பெ.சண்முகம்
சென்னை: பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்திருந்தார்.
இதையடுத்து பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டப்பேரவையில், எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர், “அந்த நிலங்களை மாற்றுத் தொழில் திட்டங்களுக்கு பயன்படுத்த போகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும்.
வேறு ஒரு திட்டத்துக்கு அந்த நிலத்தை மாற்ற முடியாது. எனவே, சட்டத்துக்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது. விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.