சென்னை: மத்திய அரசின் புதிய சட்டத்திருத்த மசோதாவின்படி சென்னை, மும்பை, கொல்கத்தாவில் வசிக்கும் மக்கள் வாரிசுரிமை சட்டத்தின்கீழ் உயில்களை மெய்ப்பிக்க நீதிமன்றம் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்றாலும் விரும்பினால் தாமாக முன்வந்துமெய்ப்பித்துக்கொள்வது அறிவார்ந்த செயல் என் சட்ட நிபுணர்கள் விளக்கம் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக உயில் என்பது ஒருவர் தனது இறப்புக்குப்பிறகு தனது சொத்துக்கள் மற்றும் உடைமைகள், பொறுப்புகள் யார், யாருக்குச் செல்ல வேண்டும், அதை எப்படி பங்கிட வேண்டும் என்பதை சட்டப்படி எழுதி வைக்கும் ஒரு ஆவணமாகும். இது சொத்துரிமை தொடர்பான சண்டைகளைத் தவிர்க்கவும், தனது விருப்பங்களை நிறைவேற்றவும், சொத்துகளை நிர்வகிக்கும் பொறுப்பாளரை நியமிக்கவும் சட்டரீதியாக உதவுகிறது.
‘வில் புரோபேட்’ எனப்படும் எழுதப்பட்ட உயிலை மெய்ப்பித்தல் என்பது ஒருவர் எழுதி வைத்துள்ள உயில் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்பதை நீதிமன்றம் மூலம் உறுதிப்படுத்தும் ஒரு சட்ட செயல்முறையாகும். மெய்ப்பித்தல் என்ற நீதிமன்ற உத்தரவுப்படி அந்த உயிலுக்கு உரிய சட்டஅங்கீகாரம் கிடைக்கிறது. இவ்வாறு மெய்ப்பித்தால் மட்டுமே வாரிசுகளுக்கிடையே ஏற்படும் சொத்து தகராறுகள், தேவையற்ற வழக்குகள் தவிர்க்கப்படுவதோடு எழுதி வைத்தவரின் நோக்கமும் நிறைவேறும்.
இந்திய வாரிசுரிமை சட்டத்தின் (1925) பிரிவு 213-ன்கீழ் ஆங்கிலேயர்கள் காலத்தில் பழமையான பிரசிடென்சி நகரங்களாக இயங்கி வந்த சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள்,சமணர்கள், பார்சியர்கள் மட்டும் தங்களது சொத்துகள் இந்த பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிக்குள் இருந்தாலோ அல்லது இந்த பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்தாலோ தாங்கள் எழுதி வைத்த உயிலை நீதிமன்றத்தில் மெய்ப்பிப்பது கட்டாயம் என்று இருந்தது.
ஆனால் இந்த 3 பெருநகரங்களைத் தவிர்த்து இந்தியாவின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இதுபோன்ற எந்தவொரு கட்டாயமும் இல்லை. இந்த காலனித்துவ பாகுபாட்டை அகற்றும் வகையில் தற்போது மத்திய அரசு சென்னை, மும்பை, கொல்கத்தா எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கான இந்த 213-வது சட்டப்பிரிவை அறவே நீக்கியுள்ளது. இதன்மூலம் உயில்களை மெய்ப்பிக்க நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை. இதற்காக நீதிமன்ற கட்டணமாக சொத்து மதிப்பில் 2 முதல் 5 சதவீதம் வரை செலுத்தவேண்டிய தேவையும் இல்லை. உயில் அங்கீகாரம் பெறுவதற்கான வழக்குதொடர்ந்து நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால் இதுபோல உயில்களை மெய்ப்பித்தல் சட்டப்படி கட்டாயம் இல்லை என்றாலும், வரும் காலத்தில் பிரச்சினை ஏற்படும் எனக் கருதினால், அல்லது விரும்பினால் தாமாக முன்வந்து மெய்ப்பித்துக்கொள்ளலாம் என்கின்றனர் சட்ட நிபுணர்கள். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற சட்ட நிபுணர்கள் கூறியது: மத்திய அரசு தற்போது வாரிசுரிமை சட்டத்தின் பிரிவு 213-ஐ மட்டுமே நீக்கியுள்ளது. ஆனால் அதனுடன் தொடர்புடைய 57(2) என்ற பிரிவில் கைவைக்கவில்லை. இந்த பிரிவானது இந்த 3 நகரங்களிலும் எப்போது, எந்த சூழ்நிலையில் அந்த உயிலை மெய்ப்பிப்பது கட்டாயம் என வரையறை செய்கிறது. பெரும்பாலான சூழலில் அது கட்டாயமில்லை என்ற விதிவிலக்கும் வாரிசுரிமை சட்டத்தில் உள்ளது. இதனால் இந்த 3 நகரங்களிலும் உயில்களை மெய்ப்பித்தல் என்பது கட்டாயமானதா, இல்லையா என்ற மற்றொரு குழப்பம் நீடிக்கிறது.
ஆனால் வங்கிகள், நிதி நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் தங்களின் விதிமுறைகளின்படி உயில் சட்டப்படி நீதிமன்றத்தில் மெய்ப்பிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே டிபாசிட் தொகையையோ அல்லது பங்குகளையோ வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கும். குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வசித்தால் பிற்காலத்தில் சொத்துரிமை கோருவதில சிக்கல் வராமல் இருக்க உயில்களை மெய்ப்பித்துக் கொள்வதும் பாதுகாப்பானது.
அதேபோல, பிரிவு 213 நீக்கம் தொடர்பான சட்டத்திருத்தம் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படவில்லை என்பதால் ஏற்கெனவே நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள உயில் தொடர்பான வழக்குகள் தொடர்ந்து நடைபெறும். தற்போதுபிரிவு 213 நீக்கப்பட்டுள்ளதால் இனி இந்த 3 பெருநகரங்களில் வசிப்போர் உயில்களை மெய்ப்பிக்க நீதிமன்ற படியேறுவது கட்டாயம் இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.