தமிழகம்

தனித் தொகுதிகளில் வேற்று மதத்தவர் போட்டியிடுவதை தடுக்கக் கோரிய வழக்கு: ஐகோர்ட் தள்ளுபடி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: இந்து, சீக்கியம் மற்றும் பவுத்த மதங்களைப் பின்பற்றும் பட்டியல் இனத்தவர்கள் மட்டுமே தனித் தொகுதிகளில் போட்டியிடுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட 44 தனித் தொகுதிகளில் இந்து, சீக்கியம் மற்றும் பவுத்த மதங்களை பின்பற்றும் பட்டியல் இனத்தவர்களை மட்டுமே போட்டியிட அனுமதிக்கக் வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத், தேர்தலுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ”44 தனித் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் 90 சதவீதத்தினர் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளதால், வேட்பு மனு பரிசீலனையின் போது அரசியல் சாசனம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டுமென அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தனித் தொகுதிகளில் போட்டியிடும் பட்டியலின வேட்பாளர்களின் சாதிச் சான்றுகளை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்; போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்துள்ளது கண்டறியப்பட்டால், அந்த வேட்பு மனுக்களை நிராகரிக்க தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி, தேர்தல் ஆணையம், 2008ம் ஆண்டே அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அதே சமயம், தேர்தல் அதிகாரிகளின் ஆய்வில் தப்பித்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், சம்பந்தப்பட்டவர்களின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள், தங்கள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

SCROLL FOR NEXT