தமிழகம்

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? - பிரதமரின் ஒப்புதலுக்கு காத்திருப்பதாக தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாற்றப்பட உள்ளதாகவும், பிரதமரின் ஒப்புதல் கிடைத்தவுடன் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில், பாஜக, ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்று படு தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்விக்கு மாநிலத் தலைமையின் தவறான அணுகுமுறையே காரணம் என, கட்சிக்குள்ளேயே கடும் விமர்சனங்கள் எழுந்தன.

அண்ணாமலை விலகல்

இந்தச்சூழலில், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியிலிருந்து விலகி, ‘வீ த லீடர்ஸ்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கினார்.

தேர்தல் தோல்வி மற்றும் அண்ணாமலையின் புதிய இயக்கம் தந்த நெருக்கடியைத் தொடர்ந்து, தமிழக பாஜகவை முழுமையாக மறுசீரமைக்க தேசியத் தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது.

அந்தவகையில், தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விரைவில் மாற்றப்பட்டு, அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அதன்படி, புதிய மாநிலத் தலைவரை நியமிப்பதற்கான ஆலோசனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. குறிப்பாக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம சீனிவாசன், மாநிலச் செயலாளர்கள் அஸ்வத்தாமன், வினோஜ் பி.செல்வம், தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பட்டியல் பிரதமர் மோடியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. பிரதமரின் ஒப்புதல் கிடைத்தவுடன், புதிய தலைவர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

இதற்கிடையே, தமிழக பாஜகவின் அடுத்தகட்ட அரசியல் பாதையைத் தீர்மானிக்கும் மையக்குழு கூட்டம், பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தலைமையில் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், கார்த்தியாயினி, பேராசிரியர் ராம சீனிவாசன் உள்ளிட்ட மையக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், சட்டப் பேரவை தேர்தல் தோல்விக்கான காரணங்கள், உட்கட்சி செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

SCROLL FOR NEXT