புதுச்சேரி: என்டிஏ கூட்டணி உறுதிப்படுத்தப்படாத சூழலில் முதல்வர் ரங்கசாமி இன்று பிற்பகல் இரண்டு தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.
புதுவை சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 16ம் தேதி தொடங்கியது. எனினும், கூட்டணிகள் முடிவாகாததால், கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் அதிகளவில் நடைபெறவில்லை.
என்டிஏ கூட்டணியிலுள்ள என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே தொகுதி பங்கீடு முடிந்து என்.ஆர். காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், பாஜக 10, கூட்டணிக் கட்சிகளான அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சிக்கு தலா இரு தொகுதிகள் என முடிவானது. ஆனால் லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்டினின் லஜக-வை கூட்டணியில் வைத்திருக்க ரங்கசாமி விரும்பவில்லை. லஜகவை வெளியேற்றக் கோரினார். இதையடுத்து பாஜக தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தும் அதை புறக்கணித்து கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தினார்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து நேற்று மத்திய அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளரான மான்சுக் மாண்டவியா புதுச்சேரிக்கு தனி விமானத்தில் வந்தபோது, ரங்கசாமி மதுரை, திருச்செந்தூருக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டார். இதையடுத்து நேற்றும் இன்றும் என இரு நாட்களாக நட்சத்திர விடுதியில் மன்சுக் மாண்டவியா காத்துள்ளார்.
இச்சூழலில் கோயில் தரிசனம் முடித்து இன்று நண்பகலில் புதுச்சேரி திரும்பிய ரங்கசாமி, தனது கட்சியில் முக்கிய நபர்களுக்கு வேட்பு மனு படிவங்களை வழங்கினார். தொடர்ந்து தான் போட்டியிடவுள்ள மங்கலம், தட்டாஞ்சாவடி தொகுதிகளுக்கான வேட்பு மனு படிவங்களை கதிர்காமம் முருகன் கோயில், தனது வீட்டு வளாகத்தில் உள்ள சற்குரு அப்பா பைத்தியம் சாமி கோயில் ஆகியவற்றில் வைத்து வழிபாடு செய்தார்.
பின்னர் மங்கலம் தொகுதிக்கு கோரிமேடு ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்திலும், தட்டாஞ்சாவடி தொகுதிக்கு சாரம் நில அளவை துறை அலுவலகத்திலும் ரங்சாமி தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார். என்டிஏ பேச்சுவார்த்தைக்காக மத்திய அமைச்சர் காத்திருக்கும் சூழலில் தனது வேட்பு மனுக்களை ரங்கசாமி தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.