திமுக தரப்பில் ராமதாஸ் தரப்புடன் பேசப்பட்டு வருவதாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில், “தங்களுடன் யாரும் கூட்டணி தொடர்பாகப் பேசவில்லை” என மறுத்திருக்கும் ராமதாஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான தங்களின் உறவு தொடர்வதாக அறிவித்திருப்பதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.
“பாமகவுக்கு அத்தாரிட்டி நான் தான். கூட்டணி பேசுவதாக இருந்தால் யாராக இருந்தாலும் என்னிடம் தான் வரவேண்டும்” என ராமதாஸ் சொல்லி வந்த நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் அன்புமணியை அழைத்துப் பேசி பாமக தங்கள் கூட்டணியில் இணைந்திருப்பதாக அண்மையில் அறிவித்துவிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி. அதிமுக அணிக்கு அன்புமணி போய்விட்டதால், திமுக அல்லது தவெக பக்கம் போவதைத் தவிர ராமதாஸுக்கு வேறு வழியில்லை என்று சொல்லப்பட்டது. அதற்கேற்ப, ஸ்டாலின் நல்லாட்சி நடத்துவதாக திடீரென திருவாய் மலர்ந்தார் ராமதாஸ். அவரை தங்கள் பக்கம் கொண்டுவர திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் ஒரு செய்தி லீக்கானது. ஆனால், “தேர்தல் நேரத்தில் வரும் சில செய்திகள் உண்மையாகவும் இருக்கும் உண்மை இல்லாமலும் இருக்கும்” என்று அதை மறுக்க முடியாமல் மறுத்திருக்கிறார் ராமதாஸ்.
ஆக, அன்புமணி தரப்பிடம் தான் பாமக இருப்பதாக நம்பும் அதிமுக, அவரைப் பிடித்து தங்கள் பக்கம் நிறுத்திவிட்டது. இந்த விஷயம் திமுக-வுக்கும் தெரிந்திருப்பதாலோ என்னவோ, ராமதாஸை அந்தக் கட்சி இன்னும் வெளிப்படையாக நெருங்காமல் இருக்கிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ராமதாஸுடன் திமுக பேசுவதாக தெரிந்தாலே விசிக முறைத்துக் கொள்ளும். ஒருவேளை, ராமதாஸை சேர்த்துக்கொள்ள விசிக சம்மதித்தாலும், மகனுக்கு அதிமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் தருகிறார்களோ அதற்கு குறைவில்லாத வகையில் தங்களுக்கும் தர வேண்டும் என்று ராமதாஸ் டிமாண்ட் வைப்பார்.
அப்படிப் பார்த்தால், 18 தொகுதிகளுக்கு குறையாமல் ராமதாஸுக்கு திமுக தரவேண்டி இருக்கும். திமுக அதற்கு ஒத்துக் கொண்டால், தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் அனைத்துமே தங்களுக்கான எண்ணிக்கையை கணிசமாக உயர்த்திக் கேட்பார்கள். அதை தர மறுத்தால், “இரண்டு துண்டான கட்சியே இத்தனை தொகுதிகளைக் கேட்கும்போது நாங்கள் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது?” என்று நியாயம் கேட்பார்கள். அதேசமயம், இவர்களைப் போலவே, 5 அல்லது 6 சீட்டுக்கு ராமதாஸை திமுக சம்மதிக்க வைத்தாலும் சிக்கல் இருக்கிறது. “6 தொகுதிகளில் போட்டியிட்ட அவர்கள் பெரிய கட்சியா... 18 தொகுதிகளில் போட்டியிட்ட நாங்கள் பெரிய கட்சியா?” என அன்புமணி தரப்பு ராமதாஸ் தரப்பை சீண்டிப் பார்க்கும்.
ஆக, தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளை கேட்டடைய வேண்டுமானால் ராமதாஸுக்கு இப்போது இருக்கும் விசாலமான ஒரே வழி தவெக பக்கம் போவது மட்டும் தான். இருந்தாலும் அதை கடைசி சாய்ஸாகவே அவர் வைத்திருக்கிறார். பாமக தன்னிடமே இருப்பதாகச் சொல்லிக் கொண்டே வந்த ராமதாஸுக்கு இப்போது லேசான பயம் வந்துவிட்டது. இரண்டு திராவிடக் கட்சிகளும் தன்னைக் கண்டுகொள்ளாமல் மகனுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து அதன் மூலம் கட்சியை அவர் பக்கம் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார்களோ என்ற படபடப்பு அவருக்கு. அதனால் தான், தன்னைக் கேட்காமல் அன்புமணியுடன் கூட்டணி பேசிய பழனிசாமியை அவரால் சத்தமாகக் கூட திட்டமுடியவில்லை.
“அன்புமணி இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம்” என்று சொல்வதற்கு மாறாக, “இன்னும் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டு விலகவில்லை” என சம்மன் இல்லாமல் விளக்கமளித்திருக்கிறார் ராமதாஸ். இதன் மூலம், மகனுக்கு நிகராக தனக்கும் மரியாதை அளித்தால் என்டிஏ கூட்டணியில் இருக்கவும் எங்களுக்கு சம்மதம் என சொல்லாமல் சொல்லி இருக்கிறார் ராமதாஸ்.
தேர்தலுக்குத் தேர்தல், ஜெயிக்கும் குதிரையில் மட்டுமே சவாரி செய்து கட்சியை தந்திரமாக வளர்த்தெடுத்த சாணக்கியர் ராமதாஸ், இப்படி எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் முட்டுச் சந்தில் நின்று புலம்பும் நிலைக்கு ஆளாகி இருப்பது தமிழக அரசியல் களம் எதிர்பார்க்காத ஒன்று தான்.