பாமக நிறுவனர் ராமதாஸ்
யாருடன் கூட்டணி என்பது இன்னும் மூன்று நாளில் முடிவாகும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
“நமது இலக்கை அடைவதற்கான வாகனம் வந்துவிட்டது” என்று கடந்த வாரம் சொன்ன ராமதாஸ், இன்னும் கூட்டணியை முடிவு செய்ய முடியாத குழப்பான நிலையில் இருக்கிறார். இதனால் அவரது விசுவாசிகள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக நிர்வாகிகள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நேற்றும் தைலாபுரத்தில் நடத்தினார் ராமதாஸ். கடந்த ஒரு வாரத்தில் ராமதாஸ் நடத்திய 2-வது கருத்துக் கேட்புக் கூட்டம் இது. இந்தக் கூட்டத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “பாமக, இப்போது முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறது. நாங்கள் இன்னும் கூட்டணி பற்றி முடிவு செய்யவில்லை; விரைவில் முடிவு செய்வோம். கூட்டணியைப் பற்றி முடிவு செய்யாததால் கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை” என்றார்.
“நமக்கான வாகனம் வந்துவிட்டது என்று சொன்னீர்களே... அந்த வாகனத்தில் எதாவது மாற்றம் இருக்கிறதா..?” செய்தியாளர்கள் கேட்டதற்கு, “மாற்றங்கள் வருவது இயற்கை. ஒரு முடிவு எடுத்து விட்டால் உறுதியாக இருப்போம். அடுத்த 3 நாட்களில் தமிழக அரசியலில் பரபரப்பு இருக்கும். இன்னும் 3 நாட்களில் கூட்டணி உறுதி செய்யப்படும்” என்றார். “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று சொல்லி வந்த ராமதாஸ், மாசியிலாவது மகிழ்ச்சியான முடிவை அறிவிப்பாரா என்று பார்க்கலாம்.