திருச்சியில் நேற்று நடைபெற்ற பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். உடன், பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை மற்றும் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர். படம்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி: பாஜகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யாரும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை என அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில்பாஜக தேசிய செயலாளரும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான அரவிந்த் மேனன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்தார்.
மாநிலப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், முன்னாள் மாநில தலைவர் தமிழிசை, மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், தேர்தலில் பாஜக தோல்விக்கான காரணங்கள், கட்சியிலிருந்து அண்ணாமலை விலகல், தமிழகத்தில் பாஜகவுக்கு 2-ம் கட்டத் தலைவர்களை உருவாக்குவது, கட்சி மறு சீரமைப்பு, திராவிட அரசியல் கட்டமைப்பை உடைப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு பின்னர் ராம.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியது: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதால் கட்சிக்கு பாதிப்பு இல்லை. பாஜகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அவர்கள் மீண்டும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொள்வார்கள். அதன்படி, அண்ணாமலையும் மீண்டும் பாஜகவில் இணைவார்.
திமுக ஆதரவுடன் 5 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு அளித்து, திமுக முதுகில் குத்தியுள்ளது. இது அவர்களது வழக்கம். காங்கிரஸுடன் இனி திமுக கூட்டணி வைத்தால் திமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இல்லை என்றால் ஒரு தொகுதியில் கூட வென்றிருக்காது. காரியம் முடிந்தவுடன் திமுகவை கழட்டிவிட்டு சென்ற கட்சி காங்கிரஸ்.
இண்டியா கூட்டணியில் 2024-ல் பிரதமர் வேட்பாளராக ராகுலை ஸ்டாலின் முன்மொழிந்தார். அந்த நன்றி கூட காங்கிரஸுக்கு இல்லை. தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, போதை கலாச்சாரம் என எதுவும் சரியாகவில்லை. நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக கூறினர். அதையும் வெளியிடவில்லை. இந்த அரசாங்கம் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. இவ்வாறு கூறினார்.