சென்னை: தேமுதிக சார்பில் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக எல்.கே.சுதீஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் சகோதரரான இவர், அக்கட்சியின் பொருளாளராகவும் உள்ளார்.
தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகிறது. இதில் 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும். திமுக தனது 4 இடங்களில் ஒரு இடத்தை காங்கிரஸ் கட்சிக்கும், இன்னொரு சீட்டை தேமுதிகவுக்கும் ஒதுக்கியது. மீதமுள்ள இரு இடங்களில் திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. இந்தச் சூழலில், தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளார் எல்.கே.சுதீஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தேமுதிக சார்பில் வெளியான அறிவிப்பில், ‘2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளராக கழகத்தின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் போட்டியிடுவார் என்று தலைமை கழகத்தின் சார்பாக கழக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.