கோப்புப்படம்
திருவள்ளூர்: தொடர் மழையால், திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது; குடியிருப்புகளை சூழ்ந்த ஏரி உபரிநீர் மற்றும் மழைநீரால் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாயினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால் ஆரணி, கொசஸ்தலை, கூவம் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணை உபரிநீர் மற்றும் பூண்டி ஏரி உபரிநீர், ஆரணி மற்றும் கொசஸ்தலை ஆறுகளில் வெள்ள நீரோடு, பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதில், ஆரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீர், ஊத்துக்கோட்டை முதல் பழவேற்காடு வரை உள்ள தடுப்பணைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவ்வாறு பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நீரால், பழவேற்காடு அருகே ஆண்டார் மடம் பகுதியில் உள்ள தற்காலிக தரைப்பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன் தினம் துண்டிக்கப்பட்டு அடித்து செல்லப்பட்டது.
இதனால், காட்டூர் - பழவேற்காடு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவைகளுக்கு ஆண்டார்மடம் பகுதி மக்கள் 20 கிமீ தூரம் சுற்றி பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பூந்தமல்லி அருகே உள்ள கண்ணப்பாளையம் ஏரி மழையால் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. அவ்வாறு வெளியேறும் உபரிநீர், உபரிநீர் கால்வாயையொட்டியுள்ள பானவேடுதோட்டம், எஸ்.பி.இ.மோனோ சிட்டி, எஸ்பிஇ மெட்ரோசிட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளன. இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், மீஞ்சூர் ராஜேஸ்வரி நகர், கலைஞர் நகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், அப்பகுதிவாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல், மீஞ்சூர் அருகே நாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கேசவபுரம் பத்மாவதி நகர் பகுதியில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால், அங்கு வசிக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்; திருநின்றவூர் அருகே நெமிலிச்சேரி, பாடியநல்லூர்- பாலாஜி நகர், ஆவடி அருகே உள்ள கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலை பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
தொடர் மழையால், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல், ஆவடி எச்.வி.எப் சாலை ஆகிய இடங்களில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில், ஆவடி மாநகராட்சி சார்பில் நரிக்குறவர் இன மக்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கும் விழா நேற்று திருமுல்லைவாயல் மற்றும் ஆவடி எச்.வி.எப் சாலை நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்றது.
இதில், அமைச்சர் சா.மு.நாசர் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன குடும்பங்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கினார். தொடர்ந்து அவர் ஆவடி மாநகராட்சி அலுவலக வளாகத்தில், மாநகராட்சி சார்பில் 300-க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்களுக்கு அத்தியாவசிய மளிகை பொருட்களை வழங்கினார்.
பிறகு, அங்கு தூய்மை காவலர்களுக்காக நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் சா.மு.நாசர் பார்வையிட்டார். இந்நிகழ்வுகளில், ஆட்சியர் பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயர் உதயகுமார், ஆணையர் சரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.