சென்னை: நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (மே 19) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய உயரதிகாரி வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேற்கு மத்தியப் பிரதேசம் முதல் தெற்கு உள் கர்நாடகம் வரை, மத்திய மகாராஷ்டிரா, மராத்வாடா, வட உள் கர்நாடகம் வழியாக சுமார் 3.1 கி.மீ. முதல் 5.8 கி.மீ உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதுதவிர, தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் (தெற்கு லட்சத்தீவுப் பகுதியை ஒட்டிய) பகுதியிலிருந்து தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேசம் மேல் உள்ள மேலடுக்கு சுழற்சி வரை, கேரளா, தெற்கு உள் கர்நாடகம் மற்றும் ராயலசீமா வழியாக சுமார் 3.1 கி.மீ. முதல் 5.8 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும். மே 20-ம் தேதி மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 21-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மே 22-ல் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் , வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மே 21, 22 ஆகிய தேதிகளில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 19) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இத்தகவலை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.