சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 17-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒடிசாவின் உட்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடாவரை தெற்கு சத்தீஸ்கர், விதர்பா, மரத்வாடாவுக்கு மேல் சுமார் 900 மீட்டர் உயரத்தில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, உள் கர்நாடகம் மற்றும் உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று (12-ம் தேதி) கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். 13 முதல் 17-ம் தேதி வரை கன்னியாகுமரி, திருநல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். இதர தமிழக பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும்.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.