ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
சென்னை: மத்திய பட்ஜெட்டில், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதுதவிர, புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தும்போது, சென்னை - பெங்களூருக்கு 1.13 மணி நேரத்தில் செல்ல முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில், ரயில்வே மண்டலங்கள் வாரியான ஒதுக்கீடு குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், புதுடெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று கூறியதாவது:
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது, 2009-14-ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒப்பிடும்போது 9 மடங்கு அதிகமாகும். முக்கிய நகரங்களை இணைக்கும் வகையிலான 7 வழித்தடங்களில் புல்லட் ரயில் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
இதன்படி சென்னை- பெங்களூரு வழித்தடம், சென்னை- ஹைதராபாத் வழித்தடம் என 2 புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. இவை மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் விதமாக, அதிவேக ரயில் வழித்தடமாக வடிவமைக்கப்படும். சென்னை - பெங்களூருவுக்கு ஒரு மணி நேரம் மற்றும் 13 நிமிடம் பயண நேரமாக இருக்கும்.
சென்னை- ஹைதராபாத்துக்கு பயண நேரம் 2.55 மணி நேரமாகும். ஹைதராபாத் - சென்னை - பெங்களூரு நகரங்களை இணைக்கும் வகையில் இந்த புல்லட் ரயில் திட்டம் இருக்கும். இதன் மூலமாக, தென் இந்திய மாநிலங்களில் போக்குவரத்து, சுற்றுலா, கல்வி என ஒட்டுமொத்தமாக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் தண்டவாளம் அமைத்தல், நிலைய மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.35,701 கோடி மதிப்பில் நடைபெறுகின்றன. அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ், 77 நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. மேலும் பல அம்ரித் பாரத் ரயில் மற்றும் வந்தேபாரத் ரயில்களின் சேவைகளுக்காக திட்டமிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இதுவரை 97 சதவீதம் மின்மயமாக்கல் பணி நிறைவடைந்துள்ளது. விரைவில் 100 சதவீதம் மின்மயமாக்கல் பணி நிறைவடையும். ரயில்வே திட்டங்கள், கட்டுமானத்துக்கு தமிழக அரசு ஆதரவு தேவைப்படுகிறது. ரயில்வே திட்டங்களுக்கு தேவைப்படும் 4,346 ஹெக்டர் நிலத்தில், இதுவரை 1,052 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 24 சதவீதம் அளவு நிலமே தமிழக அரசு வழங்கியுள்ளது. 100 சதவீதம் நிலம் கையகப்படுத்த ஆதரவு அளிக்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
அத்திப்பட்டு - புத்தூர், மன்னார்குடி - பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ஆகிய புதிய ரயில் பாதைககளுக்கான நிலம் கையகப்படுத்தல் பூஜ்ஜியத்தில்தான் இருக்கிறது. நிலத்தை கையகப்படுத்துவது மூலமாக, மாநிலத்தில் போக்குவரத்து வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசிடம் பேச்சு: தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் விபின்குமார், சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் கூறியதாவது: இந்த பட்ஜெட்டில் தமிழகம், கேரள ரயில்வே திட்டங்களுக்கு ரூ.11,406 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு புதிய மற்றும் அகலப்பாதை திட்டங்களுக்கும் ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்துள்ளன.
தமிழகத்தில் நடக்கும் புதிய ரயில் பாதை திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்த, தமிழக அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணிகள் நிறைவடைந்து விட்டன. அடுத்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். எழும்பூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.