சென்னை: சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் வரும் 18-ம் தேதி டெல்லியில் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதனால் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுக கூட்டணியில் அக்கட்சித் தலைவர்கள் டெல்லி சென்று வருவதும், டெல்லி தலைவர்கள் தமிழகம் வந்து செல்வதுமாக பரபரப்பாக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதனிடையே காங்கிரஸில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்டக் குழு, முதல்வர் ஸ்டாலினை ஒரு முறை சந்தித்து பேசிய பின்னர் முன்னேற்றம் இல்லாமல் உள்ளது. இதனிடையே, விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட ஆதரவு கோஷங்கள் தமிழக மற்றும் தேசிய காங்கிரஸார் மத்தியில் வலுப்பெற்று வருகிறது. ‘ஜனநாயகன்’ பொங்கல் வைக்கவும் காங்கிரஸார் சிலர் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதே போல அதிக இடம், ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என்ற கோஷமும் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் தொடர்பாக தமிழக தலைவர்களுடன் ஆலோசனை நடத்த ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். இதன்படி வரும் ஜன.18-ம் தேதி இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பங்கேற்க முன்னாள் காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தேசிய பொறுப்புகளில் இருப்பவர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கிருஷ்ணசாமி, கே.வி.தங்கபாலு, திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸார் வலியுறுத்தும் ஆட்சியில் பங்கு, அதிக இடம் பெறுவது தொடர்பாகவும், வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகள், மாவட்ட தலைவர்கள் நியமனம், தேர்தல் பிரச்சார வியூகம், தமிழகத்தில் நடைபெற உள்ள காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடுகள், கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.