தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான ஆயத்தக் கூட்டம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் பங்கேற்றனர்.
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல்குறித்த ஆயத்தக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிலையில், அக்கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும், அதே நேரத்தில் திமுகவிடம் அதிக இடம், ஆட்சியில் பங்கும் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் கடந்த 2016-ம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது அதிக இடம், ஆட்சியில் பங்கு கோரிக்கை காங்கிரஸில் வலுப்பெற்று வருகிறது. திமுக கூட்டணியில் கிடைக்காவிட்டால், தவெகவுடன் கூட்டணி வைத்து பெறுவது என மாற்று யோசனையும் காங்கிரஸில் சில தலைவர்கள் முன்வைத்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பதிவுகளையும் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுகவுடன் கூட்டணி பேச்சு நடத்த காங்கிரஸின் தமிழக மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. இதன்தொடர்ச்சியாக ஜனநாயகன் திரைப்படத்துக்கு ஆதரவாக காங்கிரஸார் பதிவிடுவதும், ஜனநாயன் பொங்கல் வைக்க முற்படுவது போன்ற செயல்கள் திமுகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, தவெகவுடன் கூட்டணி வைப்பதற்கான ஆயத்தமே என தகவல் பரவியது. இந்த நடவடிக்கைகள் திமுக தலைமைக்கு மேலும் எரிச்சலூட்டியதாக தெரிகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிடம் செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்தொடர்ச்சியாக சட்டப்பேரவை தேர்தல் ஆயத்த பணிகளை மேற்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே,மூத்த தலைவர் ராகுல் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் தமிழக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் உள்ளிட்டோரிடம் தனித்தனியாக கருத்துகள் கேட்கப்பட்டன.
இதில் பெரும்பாலானோர் திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்றும், அதே நேரத்தில் அதிக இடம், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். சில தலைவர்கள் தவெகவுடன் கூட்டணி வைப்பது தான் எதிர்கால காங்கிரஸ் வளர்ச்சிக்கு சரியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கூட்டத்தின் முடிவில் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்தக் கூட்டத்தில், மொத்தம் 41 உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை கூறினர். அனைவரது கருத்துகளையும் தலைமை பரிசீலிக்கும். ராகுல்காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் இறுதி முடிவு எடுப்பார்கள். தேர்தல் கூட்டணி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைமையே முடிவு செய்யும். கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் பேசவும், சமூகவலைத்தளங்களில் பதிவிடவும் கூடாது என நிர்வாகிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.