கோப்புப் படம்
சென்னை: தமிழக அரசின் கைத்தறி, கைவினைப் பொருட்கள், துணிநூல் மற்றும் காதித்துறையின் செயலர் வி.அமுதவல்லி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பட்டுவளர்ப்புத் துறை பணியிடங்களுக்கு சிறப்பு விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி, பட்டுவளர்ப்பு உதவி இயக்குநர் நேரடி நியமனத்துக்கு எம்எஸ்சி விவசாயம் (பட்டு வளர்ப்பு) பட்டம் கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்படுகிறது. அதேபோல், பட்டு வளர்ப்பு உதவி ஆய்வாளர் பதவிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பிஎஸ்சி பட்டு வளர்ப்பு பட்டம் ஆகும்.
பட்டு வளர்ப்பு இளநிலை ஆய்வாளர் பதவிக்கு தோட்டக்கலை அல்லது விவசாயத்தில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். அல்லது உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் பாடங்களுடன் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. பட்டுவளர்ப்புத் துறையில் உதவி இயக்குநர், உதவி ஆய்வாளர், இளநிலை ஆய்வாளர் ஆகிய பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதால் அவற்றுக்கான நேரடி நியமனங்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.