புதுச்சேரி: ரோடு ஷோ நடத்த அனுமதி கோரி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (புதன்கிழமை) மீண்டும் சந்தித்தார். இம்முறை ஈசிஆரில் நடத்த அனுமதி கோரினார். ஆனால், காவல்துறை அதிகாரிகள் ரோடு ஷோ நடத்த திட்டவட்டமாக அனுமதி மறுத்தனர். அதற்குப் பதிலாக பொதுக்கூட்டம் நடத்த விண்ணப்பிக்கலாம் என்றனர்.
புதுவையில் தவெக தலைவர் விஜய் டிச.5-ம் தேதி ரோடு ஷோ நடத்த முடிவு செய்து காவல்துறையிடம் தவெக தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. கரூர் துயரச் சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதனிடையே, தவெக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி வந்து காவல்துறை அதிகாரிகள், முதல்வரை சந்தித்தார். நேற்று தவெக பொதுச் செயலர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா நேரில் வந்து 4-வது முறையாக முதல்வர், காவல்துறை அதிகாரிகளை சந்தித்தனர். இருப்பினும் ரோடுஷோ நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இன்று காலை சட்டப்பேரவையிலுள்ள முதல்வர் அறைக்கு காவல்துறை டிஜிபி ஷாலினி சிங், ஐஜி அஜிஸ்குமார் சிங்ளா, டிஜஜி சத்தியசுந்தரம் உள்ளிட்டோர் வந்தனர். அதைத்தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனும் வந்தார். அவர்கள் முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.
அதில், விஜய் பங்கேற்கவிருந்த ரோடு ஷோவுக்கு புதுச்சேரியில் அனுமதி தராதது ஏன் என்பது பற்றியும், உயர் நீதிமன்ற உத்தரவு விவரமும் முதல்வர் ரங்கசாமிக்கு முழுமையாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து, பயிற்சி பெற்றும் பணி வாய்ப்பு இல்லாமல் உள்ள 68 ஊர்க்காவல் படை வீரர்கள் நிலை தொடர்பாகவும் முழுமையாக விவாதித்தனர் என்றும் தெரிகிறது.
அதைத்தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் மீண்டும் சட்டப்பேரவையில் உள்ள முதல்வர் அறையில் ரங்கசாமியை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி காவல்துறை அதிகாரிகளிடம் பேசினார். முதல்வர் சந்திப்புக்கு பின் வெளியே வந்த புஸ்ஸி ஆனந்த், செய்தியாளர்களின் கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.
இதையடுத்து காவல்துறை மற்றும் முதல்வர் அலுவலக வட்டாரங்களில் விசாரித்தபோது, விஜய் ரோடு ஷோவுக்கு முன்பு தவெக தரப்பில் தந்த சாலை பகுதி, மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் மறுக்கப்பட்டது. தற்போது புதுச்சேரி ஈசிஆரில் சிவாஜி சிலை முதல் கொக்கு பார்க் வரை சுமார் 1.5 கி.மீ தொலைவுக்கு விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் சாலை அகலமாக இருக்கும் என்று புஸ்ஸி ஆனந்த் முதல்வரிடம் கோரினார். ஆனால், அதற்கு காவல்துறை அதிகாரிகள் ரோடு ஷோவுக்கு அனுமதி கிடையாது என்றும், பொதுக்கூட்டம் நடத்த விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.