தமிழகம்

புதிய கட்டிடத்தில் புதுச்சேரி ஆளுநர் மாளிகை: குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500 வழங்க ஆளுநர் ஒப்புதல்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகை இன்று முதல் புதிய கட்டிடத்தில் செயல்படத் தொடங்கியது. புதிய அலுவலகத்தில், 21 முதல் 55 வயதிற்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்குவது உள்பட 3 முக்கிய கோப்புகளுக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கையெழுத்திட்டார்.

புதுச்சேரியில் பாரதி பூங்கா எதிரே துணை நிலை ஆளுநர் மாளிகை செயல்பட்டு வருகிறது. அது பழைய கட்டிடம் என்பதால் தற்போது அங்கு புதுப்பிக்கும் பணி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக பழைய சாராய வடிசாலை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்துக்கு தற்போது துணை நிலை ஆளுநர் அலுவலகம் இடம் மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், கடற்கரைச் சாலையையொட்டி குபேர் சாலையில் அமைந்துள்ள புதிய அலுவலகத்தில் ஆளுநர் மாளிகை இன்று முதல் செயல்படத் தொடங்கியது. புதிய கட்டிடத்தில் தனது முதல் நாள் பணியை தொடங்கிய துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன், மூன்று கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் வழங்கி கையொப்பம் இட்டார்.

கோப்புகள் விவரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை தரப்பில் கூறுகையில், “புதுச்சேரி மாநிலத்தில் ஏழ்மை நிலையில் உள்ள 21 முதல் 55 வயதிற்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்குவதற்கு ஒப்புதல் தரப்பட்டது. இதன் மூலம் 64,450 குடும்பத் தலைவிகள் பயன்பெறுவர். இதற்காக ரூ.16.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஒப்புதல் கோப்பில் கையெழுத்திடப்பட்டது. இதன்படி, 1,96,616 பயனாளிகளுக்கு ரூ.2,500, ரூ.3,000 மற்றும் ரூ.4,000 வழங்க ஏப்ரல் மாதத்திற்கான தொகையாக ரூ.56.32 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிப்டிக் நிறுவன பங்குதாரர்களுக்கு (புதுச்சேரி அரசு மற்றும் ஐடிபிஐ வங்கி) பங்குத் தொகை ரூ.37.76 லட்சம் மற்றும் சிறப்பு பங்குத் தொகை வழங்குவதற்காக ஒப்புதல் கோப்பில் கையெழுத்திடப்பட்டது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT