தமிழகம்

என்டிஏ அரசுக்கு எதிராக மார்ச் 15-ல் திமுக கூட்டணி கட்சிகள் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

காஸ் பிரச்சினை, நிதிப் பகிர்வு விவகாரத்தை முன்வைத்து போராட்டம்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்டிஏ அரசையும், அதன் கூட்டணியையும் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் வரும் மார்ச் 15-ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வெளியான அறிக்கையில், “ஒன்றிய பாஜக என்டிஏ அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவும் இன்று நாடு முழுவதும் சமையல் காஸ் சிலிண்டருக்கும், வணிக ரீதியிலான காஸ் சிலிண்டருக்கும் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர்.

உணவகங்கள், வணிக நிறுவனங்கள் சரிவர இயங்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. சிறு - குறு தொழில்கள் உள்ள அதிக தொழில்வளமிக்க தமிழ்நாடு இந்த கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்பதால் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையை சரிசெய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தி இருந்தார்.

ஆனால் தற்போது வரை மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கி நிலைமையை சீராக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை ஒன்றிய அரசு. நாடாளுமன்றத்தில் இதைப்பற்றி பேசவே பிரதமர் மறுத்து வருவது கண்டத்திற்குரியது.

          

அதோடு தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி , நூறு நாள் வேலை திட்ட நிதி, குடிநீர் இணைப்பு நிதி என எந்த நிதியையும் ஒதுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், ஒசூர் விமான நிலையம் என எந்தவொரு வளர்ச்சித் திட்டத்திற்கும் அனுமதி தராமல் முட்டுக்கட்டை போட்டு வருவது, மும்மொழி திணிப்பு என்ற பெயரில் தமிழ்மொழியை அழிக்க துடிப்பது, கீழடி அகழ்வாய்வு முடிவுகளை ஏற்க மறுப்பது என தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.

இப்படி தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்டிஏ அரசையும், அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து வரும் மார்ச் 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, காலை 10.30 மணியளவில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

மேலும், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்கின்ற வகையில், மாவட்ட கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்து, தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் என்டிஏ அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பதாகக் கூறி திமுக அரசுக்கு எதிராக மார்ச் 17-ம் தேதி என்டிஏ கூட்டணிக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியின் இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பு கவனம் பெறுகிறது.

SCROLL FOR NEXT