மயிலாப்பூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் புரோட்டீன் பவுடர் மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை மயிலாப்பூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பட்டினப்பாக்கம் ஐயப்பன் கோயில் அருகே பறக்கும் படையினர் நேற்று அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை மறித்து சோதனையிட்டனர். அதில் உடற்பயிற்சி செய்பவர்கள் பயன்படுத்தும் புரோட்டீன் பவுடர் டப்பாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ரூ.1.50 லட் சம் மதிப்பிலான அந்தப் பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக, பல்லாவரம் பம்மல் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், மயிலாப்பூர் முசிறி சுப்பிரமணியம் தெருவில் வந்த ஆம்னி காரை நிறுத்தி சோதனையிட்டபோது. அதில் தடை செய்யப்பட்ட 150 பாக்கெட் புகையிலைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சென்னை சாஸ்திரி நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் மயிலாப்பூரைச் சேர்ந்த சிவா ஆகிய இருவரைப் பிடித்துப் போலீஸார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இருவரும் சென்னையில் உள்ள ஓட்டலகளில் பரோட்டா மாஸ்டர்களாக வேலை பார்த்து வருவதும், ஆந்திராவில் இருந்து இந்த புகையிலைப் பொருட்களைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்து, மயிலாப்பூர் போலீஸில் இருவரையும் ஒப்படைத்தனர்.