தவெக அமைச்சரவை விரிவாக்கத்தில் விஜய் ரசிகர் களாக இருந்து எம்எல்ஏ-க்களாக வெற்றி பெற்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா ? என்ற எதிர்பார்ப்பு, தென் மாவட்டத்தில் வெற்றி பெற்ற அவரது ரசிகராக இருந்து எம்எல்ஏ-க்கள் ஆனவர்களுக்கும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
தவெக வெற்றி பெற்ற நிலையில் விஜய் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கட ரமணன், சிடிஆர்.நிர்மல்குமார், ராஜ் மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாகி உள்ளனர்.
விஜய் அமைச்சரவையில், தவெக-வை சேர்ந்த சிலருக்கும், காங்கிரஸ் மற்றும் அதிருப்தி அதிமுகவை சேர்ந்த சிலருக்கும் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. விஜய்யுடன் பொறுப்பேற்ற அமைச்சர்கள் 9 பேரில், விஜய்யின் ஆரம்ப கால ரசிகராக இருந்து, அவர் தொடங்கிய மக்கள் இயக்கத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்தை மட்டும் குறிப்பிட முடியும்.
புதுச்சேரி விஜய் ரசிகர் மன்ற கவுரவச் செயலாளராக இருந்த ஆனந்த், புதுச்சேரி புஸ்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான பின்பு விஜய் ரசிகர் மன்றத்தின் பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனுக்கு அறிமுகமாகி, பின்னர் விஜய்க்கும் நெருக்கமாகி அகில இந்திய விஜய் ரசிகர் மன்றப் பொறுப்பாளர், விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் என பல பதவிகளை வகித்த அவர், தமிழகத்துக்குக் குடிபெயர்ந்தார்.
ஆதவ் அர்ஜுனா, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் (மகளின் கணவர்) ஆவார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து தவெக-தொடங்கியபோது அக்கட்சியில் சேர்ந்தார். நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தைச் சேர்ந்த அருண்ராஜ் (46) முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி. தவெக தொடங்கியபோது கட்சியில் சேர்ந்தார்.
செங்கோட்டையன் மூத்த அரசியல்வாதியாக இருந்தாலும், அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்தவர்தான். சிடிஆர். நிர்மல்குமார், பாஜக, அதிமுகவில் இருந்துவிட்டு அதன்பிறகு தவெக கட்சியில் இணைந்தவர். ராஜ்மோகன், மேடை நிகழ்ச்சி தொகுப்பாளர், பட்டிமன்றப் பேச்சாளர். விஜய் தவெகவை தொடங்கியபோது, அக்கட்சியில் இணைந்தார்.
மருத்துவர் டி.கே.பிரபு, விஜய் அபிமானியாக இருந்தாலும், அவரது மக்கள் இயக்கத்தில் பணியாற்றவில்லை. தவெகவை தொடங்கியபோது அக்கட்சியில் இணைந்துள்ளார். கீர்த்தனா, விருதுநகரில் சுயேச்சையாகப் போட்டியிட திட்டமிட்டுதான் பணியாற்றி வந்தார். தவெக சிவகாசி வேட்பாளராக அறிவித்தபோதுதான், அவர் அக்கட்சியில் இணைந்த விவரமே கட்சி நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது. விஜய்யின் ரசிகராகவும், அவரது மக்கள் இயக்கத்தில் பணியாற்றி எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றவர்களுக்கும் அமைச்சரவையில் பிரதி நிதித்துவம் வழங்கப்பட வில்லை.
ஆனால், மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்எல்ஏ- வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோதும், கட்சியில் சமீபத்தில் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், விஜய் ரசிகராக இருந்தவர்களுக்கு அந்த தொகுதிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
அப்படி மதுரை மாவட்டத்தில் விஜய் ரசிகராக இல்லாமல் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிடிஆர்.நிர்மல் குமார் (திருப்பரங்குன்றம்), கார்த்திகேயன் (மதுரை கிழக்கு), கருப்பையா (சோழவந்தான்), முஸ்தபா (மதுரை மத்தி ) போன்றவர்கள் தற்போது தவெக-வில் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். ஆனால், அவரது ரசிகர்கள், ஆட்சி அதிகாரத்திலும், கட்சியிலும் முக்கியத்துவம் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் மொத்த முள்ள 10 தொகுதிகளில் தவெக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல், சிவகங்கை மாவட்டத்திலும் மொத்தமுள்ள 4 தொகுதிகளையும் கைப் பற்றியது. திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் 4 தொகுதிகளையும், தேனியில் 2 தொகுதிகளையும் தவெக கைப்பற்றியது.
இந்த மாவட்டங்களில் வெற்றிபெற்ற விஜய் ரசிகராக இருந்து தற்போது எம்எல்ஏ ஆனவர்கள் சிலருக்கு அமைச்சரவை விரிவாக்கத்தில் வாய்ப்பு வழங்கப்படுமா ? என்ற எதிர்பார்ப்பு, தென் மாவட்ட ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமைச்சராக பொறுப்பேற்று சொந்த மாவட்டங்களுக்கு வந்தவர்களுக்கும், விஜய் ரசிகராக இருந்து தவெக நிர்வாகிகளாக உள்ளவர்களுக்கும் இடையே தற்போது முட்டல் மோதல் நடந்து கொண்டிருக்கிறது.