தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

 
தமிழகம்

“தனியார் பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்திடுக” - பிரேமலதா வலியுறுத்தல்

வெற்றி மயிலோன்

சென்னை: ‘பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுத்து, கட்டண வசூலை முறைப்படுத்தி, பொதுமக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதை தடுக்க சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். அனைத்து தனியார் பேருந்துகளிலும் அரசு நிர்ணயித்த கட்டண விவரங்களை பயணிகளுக்கு தெளிவாக தெரியும்படி வெளியிட கட்டாயப்படுத்த வேண்டும்.

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து, அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பண்டிகை காலங்களில் பொதுமக்களின் பயணத் தேவையை கருத்தில் கொண்டு போதிய எண்ணிக்கையில் அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும்.

முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் அதிக பயணிகள் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு கண்காணிப்பு மற்றும் புகார் மையங்களை ஏற்படுத்த வேண்டும். ஆன்லைன் முன்பதிவு செய்யும் போது கட்டணக் கட்டுப்பாடுகளை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல், அனைத்து நாட்களிலும் தனியார் பேருந்துகளின் கட்டண வசூலை முறைப்படுத்தி, பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நிரந்தரமான கண்காணிப்பு முறையை ஏற்படுத்த வேண்டும். பண்டிகை என்பது அனைத்து மக்களும் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய காலமாகும். பணம் உள்ளவர்கள் மட்டுமே சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும் என்ற நிலையை உருவாக்கக் கூடாது.

பொதுமக்களின் அவசரத் தேவையை பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிப்பதை அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. நிர்ணயித்த கட்டண விவரங்களை பயணிகளுக்கு தெளிவாக தெரியும் படி கட்டண பட்டியலை ஒவ்வொரு பேருந்திலும் வெளியிடுவது கட்டாயமாக்கபட வேண்டும்.

எனவே, தமிழக அரசு மற்றும் போக்குவரத்துத் துறை உடனடியாக தலையிட்டு, பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையை தடுத்து, கட்டண வசூலை முறைப்படுத்தி, பொதுமக்கள் சிரமமின்றி தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசும், துறை சார்ந்த அமைச்சரும் மேற்கொள்ள வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT