சென்னை வால்டாக்ஸ் சாலையில் ஓட்டல் பயன்பாட்டுக்காக 3 சக்கர சைக்கிளில் கொண்டு செல்லப்படும் விறகு. | படம்: ச.கார்த்திகேயன் |
சென்னை: வணிக காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில விறகு பயன்பாடு அதிகரிப்பதால் அதன் விலை ஒரு குண்டு ரூ.320-லிருந்து ரூ.500 வரை உயர்ந்துள்ளது.
அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் காரணமாக இந்தியா முழுவதும் சமையல் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வணிக சிலிண்டர்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. ஊரகப் பகுதிகளில் வீட்டு உபயோக சிலிண்டர் பதிவு செய்து பல நாட்கள் காத்து கிடக்கின்றனர்.
அடுத்த சிலிண்டர் பதிவு செய்வதற்கான இடைவெளி 21 நாட்களாக இருந்தது, நகர்ப்புறங்களில் 25 நாட்களாகவும், ஊரக பகுதிகளில் 45 நாட்களாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வீட்டு உபயோக சிலிண்டரை நிரப்புவதற்கு பதிவு செய்ய ஐவிஆர்எஸ், ஆயில் நிறுவன செயலி, மிஸ்டு கால் என பல்வேறு முறைகளில் முயன்றும் பதிவு செய்ய முடியவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
வணிக சமையல் காஸ் கிடைக்காததால், பல ஓட்டல்கள் மூடப்பட்டன. சில ஓட்டல்களில் உணவு தயாரிப்பு அளவு குறைப்பு, 4 வகை பொரியல், 3 வகை சட்னி கொடுக்காமல் ஒரே வகை பொரியல், சட்னி கொடுப்பது என சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
சில ஓட்டல்கள் விறகு அடுப்புகளை பயன்படுத்தி உணவு தயாரித்து வருகின்றன. மேலும் மாணவர் தங்கும் விடுதிகள், பயணியர் தங்கும் விடுதிகள், தரை தளம் மட்டும் கொண்ட தனி வீடுகள் போன்றவற்றில் சுடுதண்ணீர் காய வைக்கவும், டீக்கடைகள் பலவற்றிலும் விறகு அடுப்புகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
இதனால் சென்னையில் விறகு அடுப்புகளின் பயன்பாடு அதிகரித்திருப்பதோடு, விறகுகள் பயன்பாடு அதிகரித்து, அதன் விலை உயர்ந்துள்ளது. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் 3 சக்கர சைக்கிள்களில் சிறு கடைகளுக்கு விறகுகள் கொண்டு செல்வது அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக மூலக்கொத்தளம் பகுதியை சேர்ந்த மர வியாபாரிகளிடம் கேட்டபோது, “இதற்கு முன்பு ஒரு குண்டு (25 கிலோ) சவுக்கு விறகு கிலோ ரூ.320 முதல் ரூ.350 வரை விற்கப்பட்டது.
இப்போது பெரிய ஓட்டல்காரர்கள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சவுக்கு தோப்புகளுக்கு நேரடியாக சென்று விறகுகளை வாங்க தொடங்கியுள்ளனர்.
இதனால் விறகு பற்றாக்குறை ஏற்பட்டு ஒரு குண்டு இப்போது ரூ.500 வரை உயர்ந்துள்ளது. உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்புள்ளது” என்றனர்.