புதுச்சேரி: உள்ளாட்சித் தேர்தலை நடத்த ஆயத்தமாக, மாநில தேர்தல் ஆணையர் பதவிக்கு புதிய நபரை தேர்வு செய்யும் பணிகளை புதுச்சேரி அரசு தொடங்கியுள்ளது.
புதுச்சேரியில் 2006-ம் ஆண்டுக்கு பிறகு உள்ளா்ட்சித தேர்தல் நடத்தவில்லை. இடஒதுக்கீடு, வார்டு மறுவரையறை என நிர்வாக, சட்ட நடவடிக்கைகளால் தேர்தல் தள்ளிப்போனது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேர்தல் நடத்த 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்க புதுச்சேரி அரசு கோரியது. அப்போது விரைவில் தேர்தல் ஆணையரை நியமிக்க நீதிபதி சசிதரன் உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து புதுச்சேரி உள்ளாட்சி துறை தேர்தல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பங்களை கோரியுள்ளது. இதற்காக புதுச்சேரி அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், 25 ஆண்டுகள் மத்திய, மாநில அரசில் பணியாற்றிய, 65 வயதுக்கு மிகாத, தேர்தல் நடத்திய அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டு, ஊதியம் உள்ளிட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்க காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.