பிரேமலதா விஜயகாந்த்
விருத்தாசலம்: “விவசாயிகள் யாரும் கடன் தள்ளுபடி அறிவிப்பை ஏற்கவில்லை. இது கண்துடைப்பு என போராட்டம் நடத்துகிறார்கள். அறிவிக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடாவிட்டால் அரசு மீதான நம்பிக்கை குறையும்” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்களின் தேவையை, எதிர்பார்ப்பை தவெக அரசு பூர்த்தி செய்ய வேண்டும். எனது விருத்தாசலம் தொகுதியை எடுத்துக் கொண்டாலே, மக்களுக்கு நிறைய செய்ய வேண்டியதாக உள்ளது.
முதலில் விருதாச்சலத்தை மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் யாரும் கடன் தள்ளுபடி அறிவிப்பை ஏற்கவில்லை. இது கண்துடைப்பு என போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்த அரசின் அறிவிப்புக்கும், தற்போது செய்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனச் சொல்கிறார்கள். போராட்டம் நடத்தும் விவசாயிகளை கைது செய்கிறார்கள். அவர்கள் தீவிரவாதிகளோ, தேச விரோத குற்றவாளிகளோ இல்லை. இது கண்டிக்கக் கூடிய விஷயம்.
717 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக சொன்னார்கள். முதல்வர் சொன்னது போல மூடியிருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். இல்லையென்றால் மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாமல் போய்விடும்.
தமிழகம் முழுவதும் வினாடிக்கு வினாடி, ஏதோ ஒரு மூலையில் பாலியல் வன்கொடுமை நடக்கிறது. இதை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். போதைக் கலாச்சாரத்தையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.