பிரேமலதா விஜயகாந்த்

 
தமிழகம்

அமோனியா வாயு கசிவு: உரிய விசாரணை நடத்த பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழினி

சென்னை: திருவள்ளூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பாதுகாப்பு குறைபாடுகளே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறியுள்ள தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மஞ்சகரணை (கன்னிகைப்பேர்) பகுதியில் செயல்பட்டு வரும் செயின்ட் பீட்டர்ஸ் பால் சீஃபுட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூச்சுத்திணறல் மற்றும் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருது தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு குறித்து கடும் கேள்விகளை எழுப்புகிறது. தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாததன் விளைவாக அப்பாவி தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது மிகவும் கண்டனத்திற்குரியது.

தமிழக அரசு குழு அமைத்து உண்மையான காரணத்தை கண்டறிந்து சம்பவத்திற்கு காரணமான ஆலை உரிமையாளர்களிடம் உரிய 'விசாரணை நடத்தி, தண்டனை வழங்க வேண்டும். மனித உயிர்களை துச்சமாக நினைத்து ஆலைகளை நடத்தி இது போன்ற செயல்கள் நடைபெறுவது ஏற்று கொள்ளமுடியாது இது கடுமையான கண்டனத்திற்குரியது.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உயர்தர மருத்துவ சிகிச்சை மற்றும் உரிய நிவாரணம் வழங்குவதுடன், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் அனைத்து தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் பீகாரை சேர்ந்தவர்கள் என்ற செய்தி வருத்தமளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் ஆன்மசாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT