சென்னை: மேகேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் கோருவது சட்டவிரோதமானது என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முந்தைய திமுக தலைமையிலான தமிழக அரசு மேகேதாட்டு அணைக்கு புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என தன் விருப்பத்துக்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது, நாம் பெற்ற காவிரி உரிமையை பறிகொடுப்பதற்கு சமமாகும்.
அனைத்துக்கட்சி கூட்டத்திலோ அல்லது சட்டப்பேரவை கூட்டத்திலோ விவாதிக்காமல் தன் விருப்பத்துக்கு கடிதம் எழுதியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இக்கடிதம் சட்டவிரோதமானது என தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவிக்க முன்வர வேண்டும்.
மேகேதாட்டு வரைவு திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் சட்டப்படி விவாதிக்கவும், அனுமதிக்கவும் முடியாது என்று திருப்பி அனுப்பி நிராகரித்ததை தொடர்ந்து, மத்திய நீர்வள ஆணையமும் நிராகரிக்க வேண்டும் என்ற தீர்மானம் மட்டுமே சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்ற வேண்டும்.
கடந்த திமுக அரசு தான்தோன்றித்தனமாக, சட்டவிரோதமாக எழுதிய கடிதத்தை நியாயப்படுத்துவதற்காக முதல்வர் விஜய் தலைமையிலான அரசை சட்டப்பேரவையில் தவறாக பயன்படுத்த முயற்சித்துள்ளனர். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோளை தீர்மானத்தில் இணைத்தது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாகும். அதை நிராகரிக்க வேண்டும்.
மேகேதாட்டுக்காக நடுவர் மன்றம் வேண்டும் என்று கோருவது உச்ச நீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்புக்கும், மத்திய அரசிதழில் வெளியிட்டப்பட்ட அரசாணைகளுக்கும் முரணானது என உணர்ந்து உடனடியாக முதல்வர் அதை நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.